ஆன்லைன் விளையாட்டால் நேர்ந்த சோகம்.. 3 சறுமிகள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம்.. நடந்தது என்ன?
Gaziabad Suicide: கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த சிறுமிகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. கல்வியில் பின்னடைவு மற்றும் நிதிச் சிக்கல்கள் காரணமாக அவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்ததாக, துணை காவல் ஆணையர் நிமிஷ் படேல் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக அவர்களின் மொபைல் போன் பயன்பாட்டுக்கு குடும்பத்தினர் கட்டுப்பாடுகளை விதித்திருந்ததாகவும் அவர் கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் நிகழ்ந்த பரபரப்பான மூன்று சிறுமிகள் தற்கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, அதிர்ச்சியூட்டும் ஒரு கடிதம் வெளிவந்துள்ளது. பெற்றோர் அவர்களின் வீடியோ கேம் அடிமைத்தனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, 9-வது மாடியிலிருந்து குதித்து மூன்று சிறுமிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன், அவர்கள் ஒரு சிறிய டைரியில் 8 பக்கங்களைக் கொண்ட மன்னிப்பு கடிதத்தை எழுதி வைத்திருந்தனர். அதில், தங்களது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டதுடன், தாங்கள் ஈடுபட்டிருந்த கேமிங் செயல்பாடுகள் குறித்த விவரங்களையும் குறிப்பிட்டிருந்தனர்.
கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சகோதரிகள்:
ஹிங்க்லிஷ் (ஹிந்தி + ஆங்கிலம்) கலவையில் எழுதப்பட்ட அந்த டைரியில், முழுவதுமாக வாசிக்குமாறு பெற்றோரிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். “இந்த டைரியில் எழுதப்பட்ட அனைத்தையும் படியுங்கள்; ஏனெனில் இதில் இருப்பது அனைத்தும் உண்மை. இப்போது படியுங்கள்! எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. மன்னிக்கவும், பாப்பா” என அந்த குறிப்பில் எழுதப்பட்டிருந்தது. இதற்குப் பின்னர் பெரிய அழுகை எமோஜியும் வரையப்பட்டிருந்தது.
மேலும், அவர்களின் அறை சுவரில், “நான் மிகவும், மிகவும் தனியாக இருக்கிறேன். என் வாழ்க்கை மிகவும் தனிமையானது” என்று ஒருவர் எழுதியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 12 வயதான பாகி, 14 வயதான பிராச்சி, 16 வயதான விஷிகா ஆகிய மூன்று சகோதரிகள், பாரத் சிட்டி எனும் குடியிருப்பு வளாகத்தில் உள்ள தங்களது அறையை உள்ளிருந்து பூட்டி, அதிகாலை 2.15 மணியளவில் பால்கனி ஜன்னல் வழியாக ஒருவரன்பின் ஒருவராக கீழே குதித்துள்ளனர்.
அவர்கள் கீழே விழுந்த சத்தம் மிகச் சத்தமாக இருந்ததால், குடியிருப்பு வளாகத்தில் இருந்த பலர் தூக்கத்திலிருந்து விழித்தனர். குடியிருப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால், குடும்பத்தினர் அறையை உடைத்து உள்ளே நுழைவதற்குள், மூவரும் ஏற்கனவே கீழே குதித்து விட்டனர்.
3 பேரும் உயிரிழந்த சோகம்:
சிறுமிகள் உடனடியாக லோனி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் என மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோவிட் காலகட்டத்தில் இருந்து, அவர்கள் ஆன்லைன் டாஸ்க் அடிப்படையிலான கொரிய கேம் ஒன்றுக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு அந்த கேம் மீது அவர்களுக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்ததால், தங்களுக்கே கொரிய பெயர்களை வைத்துக் கொண்டு, கேமில் வழங்கப்பட்ட பணிகளைச் செய்து வந்துள்ளனர். இதனை அவர்கள் விட்டுச் சென்ற குறிப்பும் உறுதிப்படுத்துகிறது.
கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது என்ன?
“நாங்கள் கொரியாவை விட்டு விலக முடியாது. கொரியா தான் எங்கள் வாழ்க்கை. நீங்கள் எங்களை விடுவிக்க முடியாது. நாங்கள் எங்கள் வாழ்க்கையை முடிக்கிறோம்” என அந்த குறிப்பில் எழுதப்பட்டிருந்ததாக, அவர்களின் தந்தை நினைவுகூர்ந்து தெரிவித்துள்ளார். இந்த ஆன்லைன் கேமிங் ஆப் தான் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த மூன்று பேரின் தற்கொலை, கேமில் வழங்கப்பட்ட ஏதாவது பணியுடன் தொடர்புடையதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நடு சகோதரியான பிராச்சியே மற்ற இருவரையும் வழிநடத்தியதாக கூறப்படுகிறது.
“இந்த கேம் பற்றி எனக்குத் தெரிந்திருந்தால், நான் அவர்களை விளையாட அனுமதித்திருக்க மாட்டேன். நடந்தது மிக மோசமானது. இது வேறு எந்த குழந்தைக்கும் நடக்கக் கூடாது என்று நான் நம்புகிறேன். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வீடியோ கேம்களில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என சிறுமிகளின் தந்தை குமார் தெரிவித்துள்ளார்.
போலீசார் தீவிர விசாரணை:
முன்னிலை விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த சிறுமிகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. கல்வியில் பின்னடைவு மற்றும் நிதிச் சிக்கல்கள் காரணமாக அவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்ததாக, துணை காவல் ஆணையர் நிமிஷ் படேல் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக அவர்களின் மொபைல் போன் பயன்பாட்டுக்கு குடும்பத்தினர் கட்டுப்பாடுகளை விதித்திருந்ததாகவும் அவர் கூறினார். இந்த மூன்று சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டதற்கான துல்லியமான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.