யானை பாபுவுக்கு பிரியாவிடை – மகனைப் போல வளர்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்!
Farewell to Elephant Babu : கேரளா மாநிலம் பாலக்காடு அருகே பாபு என்கிற 52 வயதான யானை உடல் நல பிரச்னையால் மரணமடைந்தது. அந்த யானையை மகன் போல வளர்த்து வந்த ஜெயஸ்ரீ என்ற பெண் தற்போது தனியே நிற்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம் (Kerala) பாலக்காட்டின் கல்பாத்தி மற்றும் சதாபுரம் பகுதிகளில் மிகவும் பிரபலமான பாபு என்ற யானை (Elephant) காலமானது. 52 வயதான இந்த யானைக்கு காலில் ஏற்பட்ட நோய் காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே அதன் நிலை மோசமாகவே இருந்தது. மேலும் பருவமழை காரணமாக முறையான சிகிச்சை அளிக்க முடியாமல் போனது. இதன் காரணமாக, பாபு தனது கடைசி மூச்சை விட்டது. கடந்த 1990களில் அசாம் மாநிலத்தில் இருந்து சதாபுரம் வந்த பாபு என்ற யானையை ஜெயஸ்ரீவின் தந்தையான நாராயண ஐயர் வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார். அப்போது தொடங்கிய ஜெயஸ்ரீயின் யானை மீதான அன்பு, பின்னாளில் ஜெயஸ்ரீயின் வாழ்க்கையாகவே மாறிவிட்டிருக்கிறது . பாபுவையும் ஜெயஸ்ரீயையும் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு அந்த யானையோடு அவரின் பிணைப்பு வலிமையாக இருந்திருக்கறது.
யானை பாபுவை மகனைப் போல வளர்த்த ஜெயஸ்ரீ
யானை பாபுவைத் தன் மகனாகவே ஜெயஸ்ரீ வளர்த்து வந்திருக்கிறார். எதையும் இழந்தாலும் பாபுவின் அன்பை மட்டும் ஜெயஸ்ரீ கடைசி வரை பாதுகாத்து வந்திருக்கிறார். கேரளாவில் உள்ள கல்பாத்தி நதிக்கரையிலுள்ள நெசவாளி வீட்டில் வளர்ந்த அந்த யானை அப்பகுதியில் மிகவும் பிரபலம். அவ்வப்போது ஏதேனும் பிரச்சனை வந்தால், ஜெயஸ்ரீ வந்து யானையை அழைப்பார். யானை ஒரு பூனையைப் போல ஜெயஸ்ரீக்குப் பின்னால் நடந்துசெல்லும் காட்சி அப்பகுதியில் பலரின் மனதில் பதிந்திருக்கும்.
யானை பாபுவுக்கு செய்யப்படும் இறுதிச்சடங்கு
ஜெயஸ்ரீ ஒரு சட்டையும், ஸ்கர்டும் அணிந்து கையில் குச்சியை வைத்துக்கொண்டு பாபுவுடன் நடந்து செல்லும் புகைப்படங்கள் பல செய்தித்தாள்களில் முக்கியமாக இடம் பெற்றிருக்கின்றன. சிறந்த யானையாக இருந்தாலும், பாபுவை விற்பனை செய்யவோ, வருமானம் தேடவோ ஜெயஸ்ரீ விரும்பவில்லை. யானையை வைத்து பணம் சம்பாதிக்காமல் அதனை குழந்தையை போல ஜெயஸ்ரீ பாவித்திருக்கிறார். இந்த நிலையில் பாபு இறந்தது அவரது வாழ்க்கையைய வெறுமையாக்கியிருக்கிறது. மரணம் தொடர்பான அனைத்து சடங்குகள், பாபுவின் உடல் வாளையாரில் தகனம் செய்யப்படும் என ஜெயஸ்ரீயின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
யானை பாபுவை மனிதர்களுக்கு செய்வது போல குளிப்பாட்டி அலங்காரம் செய்யப்பட்டு இறுதிச் சடங்கானது நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பின்னர் லாரி மூலம் வாளையாறு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படவிருக்கிறது. ஒரு யானையை தனது மகனைப் போல ஜெயஸ்ரீயின் செயல் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஜெயஸ்ரீயையும் யானை பாபுவையும் பிரித்து பார்க்க முடியாது எனவும் பாபுவின் மரணத்துக்கு பிறகு ஜெயஸ்ரீயின் நிலை என்னவாகும் எனவும் பலரும் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.