மத்திய கிழக்கில் போர் பதற்றம்.. “பேச்சுவார்த்தையே தீர்வு”.. ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை..
PM modi Holds Talks With Iran President: ஈரான் அதிபருடனான இந்தப் பேச்சுவார்த்தையானது, உலக அரங்கில் ஒரு பொறுப்புள்ள நாடாக இந்தியாவின் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே உக்ரைன் - ரஷ்யா போரின் போதும் "இது போருக்கான காலம் அல்ல" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டது உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த விவகாரத்தில் இந்தியா தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் ஈரான் மோதல் தொடங்கிய பிறகு, இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற முதல் நேரடித் தொடர்பு இதுவாகும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி இந்தப் பேச்சின் போது வலியுறுத்தினார். குறிப்பாக, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் மோதல் போக்கு உலகளாவிய அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடாது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். வன்முறையைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியிலான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.
மேலும் படிக்க: இஸ்ரேல்-ஈரான் போர் சூழல்: பாதுகாப்பாக கடந்து சென்ற இந்திய கப்பல்… முழு விவரம் இதோ!
பிரதமர் மோடி ட்விட்டர் பதிவு:
Had a conversation with Iranian President, Dr. Masoud Pezeshkian, to discuss the serious situation in the region.
Expressed deep concern over the escalation of tensions and the loss of civilian lives as well as damage to civilian infrastructure.
The safety and security of…
— Narendra Modi (@narendramodi) March 12, 2026
இந்தப் பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியானுடன் பேசி பிராந்தியத்தின் இக்கட்டான சூழல் குறித்து ஆலோசித்தேன். அதிகரித்து வரும் பதற்றம், பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் பொதுக் கட்டமைப்பு சேதங்கள் குறித்து எனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தேன்.”
மேலும், “இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இந்தியாவின் முக்கிய முன்னுரிமை. அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிலைநாட்ட இந்தியா உறுதியுடன் உள்ளது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியிலான தீர்வைக் காண வலியுறுத்தியுள்ளேன்,” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து தரப்புடனும் இணைந்து செயல்பட தயார்:
இந்த உரையாடலின் போது பிரதமர் மோடி முன்வைத்த முக்கிய கருத்துகள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். போர்ச் சூழலால் பொருளாதார ரீதியிலான பாதிப்புகள் மற்றும் எரிசக்தி சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பதற்றத்தைத் தணிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் அனைத்து தரப்புடனும் இணைந்து செயல்பட இந்தியா தயாராக இருப்பதாகப் பிரதமர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
சர்வதேச நாடுகளின் பார்வை:
ஈரான் அதிபருடனான இந்தப் பேச்சுவார்த்தையானது, உலக அரங்கில் ஒரு பொறுப்புள்ள நாடாக இந்தியாவின் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே உக்ரைன் – ரஷ்யா போரின் போதும் “இது போருக்கான காலம் அல்ல” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டது உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஆபரேஷன் எபிக் ப்யூரி.. முதல் ஒரு மணி நேரம்.. ஈரான் போர் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!
தற்போதைய சூழலில், வணிக ரீதியிலான பாதிப்புகள் (எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு போன்றவை) உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், பிரதமரின் இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.