பெண் மருத்துவர் கொலை… கணவர், மாமியார் செய்த கொடூரம்.. பகீர் காரணம்
Karnataka Doctor Murder : கர்நாடகாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரை கணவர், மாமனார், மாமியார் திட்டமிட்டு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தை இல்லாத காரணத்தால், பெண் மருத்துவரை ஒட்டுமொத்த குடும்பமும் பல ஆண்டுகளாக துன்புறுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கர்நாடகா, மே 29 : கர்நாடகாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை இல்லாத காரணத்தால், கணவர், மாமனார், மாமியார் என ஒட்டுமொத்த குடும்பமே, பெண் மருத்துவரை கொடூரமாக கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சதாரா பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த ரேணுகா என்பவரை 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ரேணுகா மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் பெலகாவியில் வசித்து வந்துள்ளனர். இவர்களுடன் சந்தோஷின் தாய், தந்தையும் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு திருமணமாக பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளனர்.
பெண் மருத்துவர் கொலை
இதனால், ரேணுகாவிடம், அவரது மாமனார், மாமியார் சண்டையிட்டு வந்துள்ளதாக தெரிகிறது. திருமணத்தின் ஆரம்பத்தில் இருந்தே ரேணுகாவுக்கும், சந்தோஷ்க்கும் பிரச்னை நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இப்படியான சூழலில, மருத்துவர் ரேணுகா கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலையை கணவர் சந்தோஷ், மாமியார் ஜெயஸ்ரீ மற்றும் மாமனார் கமன்னா ஹோனகண்டே ஆகியோர் திட்டமிட்டு செய்துள்ளனர். ஆனால், இவர்கள் இந்த கொலையை ஒரு விபத்து போல சித்தரிக்க முயன்றதாக போலீசார் கூறுகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், இவர்கள் மூன்று பேரும் ரேணுகா கொலை செய்யப்பட்டதை விபத்தாக சித்தரிக்க முயன்றனர். ஆனால், முன்கூட்டியே ரேணுகா கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மாமியார் ஜெயஸ்ரீ ரேணுகாவை இருசக்கர வாகனத்தில் இருந்து தள்ளிவிட்டிருக்கிறார்.
பின்னர், ரேணுகாவை கல்லால் தாக்கி கழுத்தை நெரித்து மாமனார் கம்மனா கொலை செய்தார். பின்னர், இருவரும் ரேணுகாவின் உடலை பைக்கில் கட்டி 100 மீட்டருக்கு மேல் இழுத்துச் சென்று, அவரது சேலை பைக் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது போல் காட்ட முயற்சித்து இருக்கின்றனர்.
கணவர், மாமியார் செய்த கொடூரம்
மே 18 ஆம் தேதி மாமனார், மாமியார் ரேணுகாவை கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அன்றைய தினம் இரவு வீட்டிற்கு திரும்பி வரும் ரேணுகாவை கொலை செய்துள்ளனர்” என்று கூறினர். ரேணுகா உயிரிழந்தது குறித்து விசாரித்த போலீசார், அந்த பெண்ணுக்கு மட்டும் காயம் ஏற்பட்டது குறித்து சந்தேகம் எழுந்தது.
இதனை அடுத்து தீவிரமாக விசாரித்த போலீசார், ரேணுகா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையின் போது ஜெயஸ்ரீ மற்றும் கமன்னா கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் கூறீனார். அவர்களின் மகன் சந்தோஷ் ஹோனகண்டே ரேணுகாவைக் கொலைக்கு திட்டம் போட்டதாக அவர் கூறினார்.
இவர்கள் மூன்று பேரும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஹிண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனையில் ரேணுகா கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ரேணுகாவின் குடும்பத்தினர் வரதட்சணை மற்றும் குழந்தை இல்லாததால், அந்த குடும்பம் நீண்டகாலமாக அவரை துன்புறுத்தி வந்துள்ளதாக புகார் அளித்தனர்.