இந்திய அரசியலில் புதிய வரலாறு.. பிரதமர் மோடி தலைமையில் கூடும் NDA தலைவர்கள்
மத்திய அரசில் தேசிய ஜனநாயக கூட்டணி 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் இந்த முக்கிய கூட்டம் நடைபெறுகிறது. இதில் மத்திய அரசின் முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. குறிப்பாக, அரசுத் திட்டங்களின் பலன்கள் கடைசி நிலை மக்களிடம் வரை சென்று சேருகிறதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
ஜூன் 10, 2026: பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 12 ஆண்டுகள் பதவி வகித்து, இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக புதிய சாதனை படைத்துள்ள நிலையில், இன்று மாலை 3 மணிக்கு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் முக்கிய கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சி நடைபெறும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்.
மேலும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் மற்றும் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். கூட்டணி கட்சித் தலைவர்களான ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடுவும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
மத்திய அரசில் தேசிய ஜனநாயக கூட்டணி 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் இந்த முக்கிய கூட்டம் நடைபெறுகிறது. இதில் மத்திய அரசின் முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. குறிப்பாக, அரசுத் திட்டங்களின் பலன்கள் கடைசி நிலை மக்களிடம் வரை சென்று சேருகிறதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், 2047ஆம் ஆண்டுக்குள் “விக்சித் பாரத்” என்ற வளர்ந்த இந்தியா இலக்கை அடையும் சாலை வரைபடம் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. இதனுடன், மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையும் கூட்டத்தில் பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வெளிநாட்டு கொள்கையில் மாற்றம்:
இதற்கிடையில், பிரதமர் மோடி 12 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அவரது தலைமையில் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையில் “மிகப்பெரிய மாற்றம்” ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில், சர்வதேச சோலார் கூட்டணி (International Solar Alliance) மூலம் காலநிலை மாற்றத்திற்கான நடவடிக்கைகள், யூனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) போன்ற டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளை உலகளவில் விரிவுபடுத்துதல் போன்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், வளர்ந்து வரும் நாடுகளின் முக்கிய குரலாக இந்தியா உருவெடுத்ததுடன், உலகளாவிய நெருக்கடி காலங்களில் முதலில் உதவி செய்யும் நாடாக இந்தியா திகழ்ந்ததாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
நேருவின் சாதனையை முறியடித்த மோடி:
பிரதமர் மோடி தொடர்ந்து பதவி வகித்த நாட்களின் அடிப்படையில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்துள்ளார். ஜூன் 10ஆம் தேதி நிலவரப்படி, பிரதமர் மோடி தொடர்ந்து 4,399 நாட்கள் பதவி வகித்துள்ளார். இதன் மூலம், முதல் பொதுத்தேர்தலுக்குப் பிறகு தொடர்ந்து 4,398 நாட்கள் பதவி வகித்த நேருவின் சாதனையை அவர் கடந்துள்ளார்.
இந்த சாதனையை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், உலகத் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த சாதனை இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது.