AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டைபாய்டு காய்ச்சலை அலட்சியம் செய்யாதீர்.. அறிகுறிகள் இதோ..!

Typhoid Symptoms: சாதாரண காய்ச்சல் போல் தோன்றினாலும், டைபாய்டு ஆரம்பத்திலேயே கண்டறியப்படாவிட்டால் தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம். தொடர்ந்து காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, வயிற்று பிரச்சினைகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். சுத்தமான குடிநீர், பாதுகாப்பான உணவு மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது நோயைத் தடுக்க உதவும். சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால் டைபாய்டிலிருந்து விரைவாக மீள முடியும்.

டைபாய்டு காய்ச்சலை அலட்சியம் செய்யாதீர்.. அறிகுறிகள் இதோ..!
டைபாய்டு அறிகுறிகள்Image Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 01 Aug 2026 20:07 PM IST

சமீபத்தில் ஒரு பிரபல தொழில்முனைவோர் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக வெளியான தகவல், இந்த நோய் குறித்து மீண்டும் பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. சாதாரண காய்ச்சல் என்று நினைத்து பலரும் ஆரம்ப அறிகுறிகளைப் புறக்கணிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் சரியான நேரத்தில் பரிசோதனை செய்து சிகிச்சை பெறாவிட்டால், டைபாய்டு உடல்நலத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் குடிநீர் மற்றும் உணவின் சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

டைபாய்டு எப்படி ஏற்படுகிறது?

டைபாய்டு என்பது பாக்டீரியா தொற்றால் உருவாகும் ஒரு தீவிரமான காய்ச்சல் நோயாகும். மாசுபட்ட குடிநீர், சுத்தமில்லாத உணவு மற்றும் தனிநபர் சுகாதாரக் குறைபாடுகள் இந்த நோய் பரவுவதற்கான முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றன. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாக பரவுவதைக் காட்டிலும், மாசடைந்த உணவு மற்றும் தண்ணீர் வழியாகவே அதிகம் பரவுகிறது. இதனால் வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளிலும், வெளியில் வாங்கப்படும் உணவுகளிலும் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவது முக்கியமான முன்னெச்சரிக்கையாகும்.

ஆரம்ப அறிகுறிகளை கவனித்தால் சிகிச்சை எளிது

டைபாய்டு பாதிப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக அறிகுறிகள் தெரியாது. சில நாட்கள் முதல் இரண்டு வாரங்களுக்குள் காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, பசியின்மை, வயிற்று அசௌகரியம், குமட்டல் அல்லது மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். சிலருக்கு தொடர்ந்து அதிகரிக்கும் காய்ச்சலும் காணப்படலாம். இந்த அறிகுறிகள் சில நேரங்களில் வைரஸ் காய்ச்சலைப் போலத் தோன்றுவதால், பலர் தாமாகவே மருந்து எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வதே பாதுகாப்பான முடிவாகும்.

சிகிச்சையை தாமதித்தால் என்ன நடக்கும்?

டைபாய்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மருந்துகளின் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆனால் சிகிச்சையை தாமதப்படுத்தினால் குடல், கல்லீரல் உள்ளிட்ட உடலின் முக்கிய உறுப்புகளில் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். உடலில் நீர்ச்சத்து குறைபாடு, கடுமையான பலவீனம் மற்றும் நீண்ட நாட்கள் குணமடையாமல் இருப்பது போன்ற பிரச்சினைகளும் உருவாகலாம். எனவே காய்ச்சல் நீடித்தாலும் அல்லது உடல்நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.

எளிய முன்னெச்சரிக்கை… பெரிய பாதுகாப்பு

டைபாய்டைத் தவிர்ப்பதற்கு தினசரி சுகாதார பழக்கவழக்கங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. கொதிக்கவைத்த அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்துவது, சூடாக சமைத்த உணவை உட்கொள்வது, பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாகக் கழுவி சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் நோய் அபாயத்தை குறைக்க உதவும். உணவு சாப்பிடும் முன்பும், கழிப்பறை பயன்படுத்திய பிறகும் கைகளை சோப்பால் நன்றாகக் கழுவுவது அவசியம்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us