விழித்தவுடன் மொபைல் பார்ப்பவரா நீங்கள்? மருத்துவ நிபுணரின் அதிர்ச்சி எச்சரிக்கை!
Morning Routine: காலையில் கண் விழித்தவுடன் மொபைல் போனைப் பார்ப்பதால், உடலில் 'கார்டிசோல்' எனப்படும் மன அழுத்த ஹார்மோன் மிக வேகமாக அதிகரித்து தேவையில்லாத பதற்றத்தை உருவாக்குகிறது. போன்களுக்கு வரும் நோட்டிபிகேஷன்கள் அனைத்தும் மனிதர்களின் கவனத்தை உடனடியாக திசைதிருப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அவை அன்றைய நாளின் முக்கிய வேலைகளுக்கான கவனக்குவிப்பைப் பெருமளவில் பாதிக்கின்றன.
இன்றைய நவீன காலகட்டத்தில், காலையில் கண் விழித்தவுடன் படுக்கையை விட்டு எழுவதற்கு முன்பாகவே கையில் மொபைல் போனை எடுத்து சமூக ஊடகங்களையும், மின்னஞ்சல்களையும் பார்ப்பது பலருக்கும் ஒரு அன்றாடப் பழக்கமாகவே மாறிவிட்டது. ஆனால், இந்த ஒரு சிறு தவறு நம்முடைய ஒட்டுமொத்த நாளையும், மன ஆரோக்கியத்தையும் எவ்வாறு சீர்குலைக்கிறது என்பது குறித்து மருத்துவ நிபுணரான டாக்டர் குணால் சூட் (Dr. Kunal Sood) சில முக்கியமான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். நாம் தூங்கி எழும்போது, நம் உடலை சுறுசுறுப்பாக்குவதற்காக ‘கார்டிசோல்’ (Cortisol) எனப்படும் மன அழுத்த ஹார்மோன் இயற்கையாகவே உடலில் சுரக்கத் தொடங்கும். இந்தச் சூழலில், நாம் விழித்தவுடனேயே மொபைல் திரையைப் பார்க்கும்போது, அந்த ஹார்மோனின் அளவு மிக வேகமாக அதிகரித்து விடுகிறது. இது நம் உடலின் நரம்பு மண்டலத்தை தேவையின்றி தூண்டி, காலைப் பொழுதிலேயே கடுமையான மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் உருவாக்குவதாக மருத்துவர் எச்சரிக்கிறார்.
கவனச்சிதறலும் அறிவிப்புகளின் ஆபத்தும்
நம்முடைய மொபைல் போன்களுக்கு வரும் ஒவ்வொரு நோட்டிபிகேஷன்களும் (Notifications) மனிதர்களின் கவனத்தை உடனடியாக திசைதிருப்பும் வகையிலேயே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. காலையில் எழுந்தவுடன் இந்த அறிவிப்புகளைப் பார்ப்பது, ஏதோ ஒரு அவசரமான வேலை நமக்குக் காத்திருப்பது போன்ற ஒரு தவறான மாயையை மூளையில் ஏற்படுத்துகிறது. நாம் போனை முழுமையாகப் பயன்படுத்தாவிட்டாலும் கூட, அந்த ஒலியும் ஒளியும் நம்முடைய சிந்தனைத் திறனையும், கவனக் குவிப்பையும் பெருமளவில் பாதிக்கின்றன. இதனால், அன்றைய நாளில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாமல், மூளை சோர்வடைவதோடு அலைபாயும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.
மன உளைச்சலை ஏற்படுத்தும் ஒப்பீட்டுப் பழக்கம்
காலையிலேயே வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற செயலிகளைத் திறந்து மற்றவர்களின் பதிவுகளைப் பார்ப்பது, நமக்குள் அறியாமலேயே ஒருவித தாழ்வு மனப்பான்மையையும் சமூக ஒப்பீட்டையும் (Social Comparison) விதைத்து விடுகிறது. நேற்றிரவு ஆன்லைன் உலகில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அதீத ஆர்வமும், பதற்றமும் ஒரு சுழற்சி போல மாறிவிடுகிறது. காலையில் போனைப் பார்த்தவுடன் தற்காலிகமாக ஒரு நிம்மதி கிடைப்பது போலத் தோன்றினாலும், அது அடுத்த சில நிமிடங்களிலேயே தீவிரமான மன உளைச்சலாகவும், அன்றாடப் பணிகளில் தொய்வாகவும் மாறிவிடுகிறது என்று மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
தகவல் சுமை மற்றும் சுய முன்னுரிமை இழப்பு
ஒரே நேரத்தில் செய்திகள், வேலை சார்ந்த மின்னஞ்சல்கள், நண்பர்களின் குறுஞ்செய்திகள் எனப் பலதரப்பட்ட தகவல்கள் நம் மூளையை நோக்கிப் பாய்வதை ‘தகவல் சுமை’ (Information Overload) என்று அழைக்கிறார்கள். தூக்கத்திலிருந்து விழித்தெழும் மென்மையான தருணத்தில், இந்தத் தகவல்களைத் தரம் பிரித்து உள்வாங்கும் திறன் மூளைக்கு இருப்பதில்லை. இதனால், எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்படுகிறது. நம்முடைய சொந்தத் தேவைகளுக்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய காலைப் பொழுதை, மொபைல் போன் மூலம் மற்றவர்களின் தேவைகளுக்குத் தாரை வார்ப்பது, அன்றைய நாளின் உற்பத்தித் திறனை முற்றிலுமாகப் பாதிக்கும் என்பதால், விழித்தவுடன் மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே புத்திசாலித்தனம் என்று மருத்துவ உலகம் அறிவுறுத்துகிறது.