AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

குளிர்ந்த தண்ணீர் குடிச்சா சளி பிடிக்குமா? உண்மை இதுதான்!

Drinking Cold Water: குளிர்ந்த நீர் குடிப்பதால் நேரடியாக சளி ஏற்படாது; வைரஸ் தொற்றுதான் பொதுவாக சளிக்கான முக்கிய காரணமாகும். குளிர்ந்த நீர் சிலருக்கு தொண்டையில் தற்காலிக அசௌகரியம் அல்லது எரிச்சலை ஏற்படுத்தலாம். சளியைத் தவிர்க்க கைகளை சுத்தமாக வைத்திருப்பது, தொற்று உள்ளவர்களிடம் நெருக்கத்தைத் தவிர்ப்பது மற்றும் நல்ல தூக்கம், சத்தான உணவு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

குளிர்ந்த தண்ணீர் குடிச்சா சளி பிடிக்குமா? உண்மை இதுதான்!
அடிக்கடி சளி தொல்லையா?Image Source: Freepik
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 30 Aug 2026 06:01 AM IST

குளிர்ந்த நீர் குடித்தால் சளி பிடித்துவிடும் என்ற நம்பிக்கை பலரிடமும் நீண்ட காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக மழைக்காலம் அல்லது குளிரான நாட்களில் ஃபிரிட்ஜ் தண்ணீரைத் தவிர்ப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், உண்மையில் சாதாரண சளி என்பது குளிர்ந்த நீரால் உருவாகும் பிரச்சனை அல்ல; வைரஸ் தொற்றுதான் இதற்கு முக்கிய காரணமாகும். 200-க்கும் மேற்பட்ட வைரஸ்கள் சளியை ஏற்படுத்தக்கூடியவை என்றும், அவற்றில் ரைனோவைரஸ் (Rhinovirus) முக்கியமானதாக இருப்பதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குளிர்ந்த நீர் குடித்தால் சளி வருமா?

குளிர்ந்த நீரைப் பருகுவதால் மட்டும் ஒருவருக்கு சாதாரண சளி ஏற்படாது. சளியை ஏற்படுத்தும் வைரஸ் உடலுக்குள் சென்றால்தான் தொற்று உருவாகும். பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு, இருமல் அல்லது தும்மல் மூலம் வெளியேறும் துகள்கள் மற்றும் வைரஸ் படிந்த பொருட்களைத் தொட்டு பின்னர் முகம், மூக்கு அல்லது கண்களைத் தொடுவது போன்ற வழிகளில் தொற்று பரவலாம். எனவே, குளிர்ந்த நீரைக் குடித்த சில மணி நேரங்களில் சளி ஏற்பட்டால், அதற்கு அந்த நீரையே நேரடி காரணமாகக் கருத முடியாது.

தொண்டையில் அசௌகரியம் ஏற்படலாம்

அதே நேரத்தில், மிகவும் குளிர்ந்த நீர் சிலருக்கு தொண்டையில் தற்காலிக அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். ஏற்கெனவே தொண்டை வலி, அலர்ஜி அல்லது தொண்டையில் உணர்திறன் அதிகமாக இருப்பவர்களுக்கு குளிர்ந்த நீர் அருந்தும்போது கரகரப்பு அல்லது எரிச்சல் போன்ற உணர்வு ஏற்படலாம். இது சளி தொற்று ஏற்பட்டுவிட்டது என்பதற்கான அறிகுறி என்று அவசியமில்லை. உடலுக்கு ஏற்ற வெப்பநிலையில் தண்ணீரைப் பருகுவது இதுபோன்ற அசௌகரியத்தைத் தவிர்க்க உதவும்.

சளியைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

குளிர்ந்த நீரை மட்டும் தவிர்ப்பதைக் காட்டிலும், வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுப்பதில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் முறையாகக் கழுவுதல், சளி அல்லது இருமல் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்தல், முகம், மூக்கு மற்றும் கண்களை அடிக்கடி கைகளால் தொடாமல் இருப்பது போன்ற பழக்கங்கள் முக்கியமானவை. போதுமான தூக்கம் மற்றும் சத்தான, சமச்சீர் உணவு உடலின் இயல்பான ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

பொதுவாக சாதாரண சளி சில நாட்களில் படிப்படியாகக் குறையத் தொடங்கும். ஆனால் மூச்சு விடுவதில் சிரமம், நீடித்த காய்ச்சல், உடலில் நீர்ச்சத்து குறைதல், 10 நாட்களுக்கும் மேலாக அறிகுறிகள் நீடித்தல் அல்லது குணமடைந்த பின்னர் மீண்டும் அறிகுறிகள் தீவிரமடைதல் போன்ற நிலைகள் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

Follow Us