Devayani: இனிமையாக பாடும் தேவயானி மகள்… நீங்களே வீடியோ பாருங்க!
தேவயானியின் மகள் இனியா, ஜீ தமிழ் சரிகமப சீசன் 5 ஆடிஷனில் கலந்து கொண்டு, "மயில் போல பொண்ணு" பாடலை அற்புதமாகப் பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இனியாவின் திறமையைப் பார்த்து நடுவர்கள் வியப்படைந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக திகழும் தேவயானியின் (Actress Devayani) மகள் இனியா அற்புதமாக பாட்டு பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சரிகமப சீனியர் சீசன் 5ல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் நடிகை தேவயானி தனது மூத்த மகள் இனியாவை அழைத்து வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. நடுவர்கள் அனைவரும் கண்ணை கட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இனியா அவர்கள் முன் பாரதி படத்தில் இடம்பெற்ற “மயில் போல பொண்ணு ஒன்னு” பாடலை அச்சுபிசகாமல் பாடுகிறார். உடனே நடுவர்கள் கண்ணில் கட்டப்பட்ட துணியை அவிழ்த்து யார் என பார்ப்பவர்களுக்கு அது தேவயானி மகள் என்பதறிந்து இன்ப அதிர்ச்சி ஏற்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பேசும் இனியா, “இப்போது தான் நேரடி ஆடிஷனின் அர்த்தம் புரிகிறது” என தெரிவிக்கிறார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சி மேடையை நீங்கள் தேர்வு செய்ய என்ன காரணம் என தேவயானியிடம் கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு, “இந்த மேடை எல்லாருக்கும் கிடைக்காது”. என் மகள் தன்னுடைய சொந்த முயற்சியில் வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை” என கண்கலங்கியவாறு பேசும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
இணையத்தில் வைரலாகும் ப்ரோமோ வீடியோ
இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், “தேவயானி சிறப்பு விருந்தினர். அந்த நிகழ்ச்சியில் அவரது மகள் போட்டியாளர். நம்பவே முடியவில்லை” எனவும், “மறைந்த பாடகி பவதாரிணியின் மறு அவதாரமாக குரல் இருக்கிறது” எனவும், “ஒரு அம்மாவாக தேவயானி ஜெயித்து விட்டார்” எனவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
சரிகமப நிகழ்ச்சி
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான சரிகமப சீனியர் மற்றும் ஜூனியர் என இரண்டு நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஜூனியர் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது சீனியர் போட்டியாளர்களுக்கான நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இதற்கான ஆடிஷன் நடந்து வரும் நிலையில் அதில் தான் தேவயானியின் மகள் இனிய கலந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே தேவயானியின் கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன் மூத்த மகள் இனியா அருமையாக பாடுவார் என பல நேர்காணல்களில் தெரிவித்திருக்கிறார்.
இனியா பாடிய அந்தப் பாடல் ஞானசேகரன் இயக்கத்தில் கடந்த 2000 ஆண்டு சாயாஜி ஷிண்டே, தேவயானி உள்ளிட்ட பலரும் நடித்த மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை படமான பாரதி படத்தில் இடம்பெற்ற மயில் போல பொண்ணு பாடல் ஆகும். இளையராஜா இசையமைத்த இந்த பாடலை கவிஞர் மு.மேத்தா எழுதிய நிலையில் இளையராஜாவின் மகளும் மறைந்த பாடகிமான பவதாரணி பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.