வாக்காளர் கவனத்துக்கு.. வீடு தேடி வருகிறது பூத் சிலிப்.. சென்னையில் இன்று முதல் விநியோகம்!
Booth Slips Distribution : தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களுக்கு இன்று முதல் பூத் சிலிப்கள் வியோகம் செய்யப்பட உள்ளன. இதனை வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று வழங்க உள்ளனர் .
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி கடந்த மார்ச் 15- ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்னும் 12 நாட்களில், அதாவது வரும் ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக 4, 618 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதற்கான வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்பதன் அடிப்படையில் பூத் சிலிப்புகள் இன்று முதல் தயார் செய்யும் பணி தொடங்கி நடைபெற உள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் இன்று முதல் 28 லட்சம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்கப்பட உள்ளது. சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிகளில், 4,079 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
வீடு வீடாக பூத் சிலிப்புகள் விநியோகிக்கும் பணி
சென்னை மாவட்டம் முழுவதும் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு இன்று முதல் நேரடியாக சென்று பூத் சிலிப்புகள் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதில், வாக்காளர்கள் பெயர்கள், அவர்களது முகவரி, வாக்குச்சாவடி மையம், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். வாக்குச் சாவடி அலுவலர்கள் பூத் சிலிப் விநியோகத்தை கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க: பழனிச்சாமிக்கெல்லாம் பதில் சொல்லும் நிலைக்கு வந்துவிட்டேன்… முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம்!




பூத் சிலிப் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள்
வாக்குச்சாவடி அலுவலர்கள் பூத் சிலிப் விநியோகம் செய்ய வரும்போது, வீட்டில் வாக்காளர்கள் இல்லையெனில், அருகில் உள்ள வீடுகளில் தங்களுக்கான பூத் சிலிப்புகள் வழங்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் என்பது தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதாகும். இதன் மூலம் வாக்காளர்கள் தங்களது வாக்கு சாவடியை எளிதாக கண்டறியவும், வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை சரி பார்க்கவும் உதவுகிறது. இந்த பூத் சிலிப் வாக்கு மையங்கள், வாக்காளர்கள் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தப்படுவதாகும்.
பூத் சிலிப்புகளில் வந்த புதிய மாற்றம்
இது அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படாது. தற்போது வெளியாகியுள்ள தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி கடந்த தேர்தல்களில் பூத் சிலிப்களில் வாக்காளர்களின் புகைப்படம் இடம் பெற்று இருப்பது போல, தற்போது வழங்கப்படும் பூத் சிலிப்புகளில் வாக்காளர்கள் படம் இடம் பெற்றிருக்காது என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வாக்காளரின் தனிப்பட்ட தரவுகளை தவறாக பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தலைம தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: விஜய் இல்லை என்றால் என்ன?.. அஜித்தை குறிவைக்கும் அதிமுக.. இபிஎஸ்-ன் புதிய ‘அட்டகாச பிளான்’ இதுதான்!