சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று விஜய் பிரச்சாரம்.. முழு விவரம் உள்ளே..
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஆயிரம் விளக்கு மற்றும் தியாகராய நகர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து ரோட் ஷோ மேற்கொண்டார். அப்போது எழும்பூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டது. இரவு 8.00 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், எழும்பூர் தொகுதிக்கான பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.
சென்னை, ஏப்ரல் 20, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரவிருக்கும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, நாளை (ஏப்ரல் 21ஆம் தேதி) மாலை 6.00 மணிக்கு தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரையில் நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. அதில் முக்கியமாக, தமிழக வெற்றிக்கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ரோட் ஷோ மேற்கொண்டு, மக்கள் மத்தியில் உரையாற்றி பிரச்சாரம் செய்து வருகிறார்.
2 மாவட்டங்களில் இன்று பிரச்சாரம்:
அந்த வகையில், ஏப்ரல் 20ஆம் – இன்று திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய இரண்டு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். நேற்று திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மும் மதத்தைச் சேர்ந்த வழிபாட்டு தலங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டத்திலும் சென்னையிலும் விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பஞ்செட்டியில் காலை 10.30 மணி முதல் விஜய் வாகனப் பிரச்சாரம் மேற்கொள்வார்.
தவெக தலைமை அறிவுறுத்தல்:
அதனைத் தொடர்ந்து, மதியம் 3.00 மணி முதல் பள்ளிவாசல், அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதி வழியாக வாகனப் பிரச்சாரம் செய்யவும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த பிரச்சார நிகழ்ச்சிக்காக தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: எம்எல்ஏ பதவி விவகாரம்.. அன்புமணி ஆதரவாளர் – ராமதாஸ் பேரன் முகுந்தன் பேசிய ஆடியோ வைரல்!
மேலும், பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வரும் பொதுமக்கள், விஜயின் பிரச்சார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்தவித வாகனங்களிலும் பின்தொடரக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வந்து காத்திருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திட்டமிட்டப்படி பிரச்சாரம் நடக்குமா?
அதே சமயத்தில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஆயிரம் விளக்கு மற்றும் தியாகராய நகர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து ரோட் ஷோ மேற்கொண்டார். அப்போது எழும்பூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டது. இரவு 8.00 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், எழும்பூர் தொகுதிக்கான பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு வில்லிவாக்கம் மற்றும் சைதாப்பேட்டை பகுதிகளில் மேற்கொள்ள இருந்த பிரச்சாரங்களும் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை பிரச்சாரம் ஓய்வு பெறக்கூடிய சூழலில், இன்று திட்டமிட்டபடி அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.