அதிமுக வேட்பாளர் பிரசாரத்தில் வன்முறை.. கேள்வி கேட்ட பொது மக்களுக்கு அடி உதை.. திண்டுக்கல்லில் பரபரப்பு!!
Tamilnadu Assembly Election: இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளீர்கள். ஆனால், எங்கள் கிராமத்துச் சாலைகள் 15 ஆண்டுகளாகக் குண்டும் குழியுமாகவே உள்ளன. இதை ஏன் சீரமைக்கவில்லை?. குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது; பலமுறை சொல்லியும் நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலுக்கு மட்டும் தொகுதி பக்கம் வருகிறீர்கள் என மக்கள் சரமாரி கேள்வி.
Tamilnadu Polls 2026: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக வேட்பாளர் தேன்மொழியிடம் குறைகளைக் கேட்ட பொதுமக்கள் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ தேன்மொழி மீண்டும் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே 2016 (இடைத்தேர்தல்) மற்றும் 2021 தேர்தல்களில் வெற்றி பெற்று இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். தற்போது 2026 தேர்தலுக்காக நிலக்கோட்டை அருகே உள்ள மெட்டூர் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
இதையும் படிக்க: தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரச்சாரம் மீண்டும் ரத்து.. ஏமாற்றத்தில் மக்கள்..
மக்கள் எழுப்பிய கேள்விகள்:
இதனிடையே, பிரசாரத்தின் போது மெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வேட்பாளர் . தேன்மொழியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அதன்படி, கடந்த 15 ஆண்டுகளாக நிலக்கோட்டை தொகுதியில் அதிமுகதான் வெற்றி பெற்று வருகிறது. நீங்களும் இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளீர்கள். ஆனால், எங்கள் கிராமத்துச் சாலைகள் 15 ஆண்டுகளாகக் குண்டும் குழியுமாகவே உள்ளன. இதை ஏன் சீரமைக்கவில்லை?. குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது; பலமுறை சொல்லியும் நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலுக்கு மட்டும் தொகுதி பக்கம் வருகிறீர்கள், மற்ற நேரங்களில் அரசு விழாக்களிலோ அல்லது ஊர் விசேஷங்களிலோ உங்களைப் பார்க்க முடிவதில்லை என்று மக்கள் சரமாரியாகக் குற்றம் சாட்டினர்.
தாக்குதல் மற்றும் வன்முறை:
எம்.எல்.ஏவிடம் நேருக்கு நேர் கேள்வி கேட்ட இருவரை, அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் திடீரென எட்டி உதைத்துத் தாக்கினர். உடன் வந்த அதிமுக தொண்டர்களும் அவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்தவர்களைக் கண்டு அங்கிருந்த பெண்கள் கூச்சலிட்டனர். இதைக் கண்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடந்தபோது அதைத் தடுத்து நிறுத்த முயலாமல், வேட்பாளர் தேன்மொழி தனது பிரசாரத்தைத் தொடர்ந்து மேற்கொண்டார். பிரசார முடிவில், “இந்த ஊருக்கு எப்போது வந்தாலும் சண்டையில்தான் முடிகிறது” என்று அவர் பேசியது அங்கிருந்தவர்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க: காரைக்குடியில் சைக்கிளில் பிரச்சாரம் செய்த விஜய்.. பேசாமல் போனதால் மக்கள் ஏமாற்றம்..
தொடரும் எதிர்ப்பு:
இதேபோல் காமலாபுரம் பகுதியிலும் குடிநீர் பிரச்னை குறித்துக் கேள்வி எழுப்பிய பொதுமக்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால், தேன்மொழி தனது பிரசாரத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு கிளம்பினார். அடிப்படை வசதிகளைச் செய்து தராத வேட்பாளருக்கு எதிராகப் பொதுமக்கள் திரண்டு கேள்வி கேட்கும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.