கடலூர், ஏப்ரல் 11, 2026: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களின் கடலூர் பிரச்சாரம், நிர்வாக காரணங்களால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால், அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது. கட்சித் தலைவர் விஜய், மாவட்டம் தோறும் சென்று ரோடு ஷோ நடத்தி, மக்கள் மத்தியில் உரையாற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே தூத்துக்குடி, நெல்லை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. தமிழகம் வரும் பிரதமர் மோடி, ராகுல் காந்தி.. பயணத்திட்டம் என்ன?
விஜய்யின் அடுத்தக்கட்ட பிரச்சாரம்:
இதனைத் தொடர்ந்து, கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. கடலூரில் ஏப்ரல் 11ஆம் தேதி பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. முன்னதாக, ஏப்ரல் 9ஆம் தேதி பிரச்சாரம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற காரணத்தால், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
மேலும் படிக்க: காரைக்குடியில் சைக்கிளில் பிரச்சாரம் செய்த விஜய்.. பேசாமல் போனதால் மக்கள் ஏமாற்றம்..
கடலூர் பிரச்சாரம் மீண்டும் ரத்து:
இந்நிலையில், இன்று மீண்டும் கடலூரில் பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், கடலூர் – வடலூர் பகுதிகளில் நான்கு இடங்களில் நடைபெற இருந்த விஜய் பிரச்சாரம், நிர்வாக காரணங்களால் மீண்டும் ரத்து செய்யப்படுவதாக தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.
பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட பின்னரும் மீண்டும் ரத்து செய்யப்பட்டிருப்பது, அப்பகுதி தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தைப் பொருத்தவரையில், இது அதன் முதல் தேர்தல் என்பதால், வரவிருக்கும் தேர்தலில் மக்கள் எந்த அளவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.