வி.கே.சசிகலா தொடங்கிய கட்சிக்கு இதுதான் பெயரா… வெளியான ரகசிய தகவல்!
VK Sasikala Party Name: வி. க. சசிகலா தொடங்கிய கட்சிக்கு கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த கட்சிக்கான பெயர் விரைவில் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவரது கட்சியின் பெயர் என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வி கே சசிகலா தொடங்கிய கட்சியின் பெயர்
அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா இடைக்கால பொதுச் செயலாளராக இருந்து வந்தார். அதன் பிறகு, சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக அவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறைக்கு சென்றார். இதனால், அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் எடப்பாடி கே. பழனிசாமி இருந்து வந்தார். இதன் பிறகு, ஏற்பட்ட உள்கட்சி பூசலை தொடர்ந்து, அந்த கட்சியில் பொது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தும், வி. கே. சசிகலா உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர், சிறையில் இருந்து விடுதலையான சசிகலா மீண்டும் அதிமுகவில் இணையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். ஆனால், அதற்கான முயற்சிகள் எதுவும் அவருக்கு பலனளித்ததாக தெரியவில்லை.
வி.கே.சசிகலா கட்சியின் கொடி அறிமுகம்
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலால் அரசியலில் முக்கிய முடிவு எடுக்கப் போவதாகவும், புதிதாக கட்சி தொடங்க இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வி. கே. சசிகலா தெரிவித்திருந்தார். அதன்படி, ஜெயலலிதா பிறந்தநாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) பசும்பொன்னில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும், அதற்கான பெயரை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் கூறி, கட்சியின் கொடியை மட்டும் அறிமுகம் செய்திருந்தார்.
மேலும் படிக்க: “என் சக்திக்கு மீறி உழைத்து வருகிறேன்”.. ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி அமையும்.. முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..
வி.கே.சசிகலா கட்சியின் பெயர் என்ன
அந்த கொடியானது, கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்திலும் முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம். ஜி. ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வி. கே. சசிகலா தொடங்கிய கட்சியின் கொடியின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது கட்சியின் பெயர் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில், அவரது கட்சியின் பெயர் “அம்மா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்” ( அம்மா அதிமுக) என்று தேர்வு செய்து இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
அதிமுக வாக்கு வங்கியில் மாற்றம்
அதாவது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் வழங்குவதற்காக அம்மா அதிமுக என்ற பெயரில் கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. வி. கே. சசிகலாவின் இந்த அரசியல் வருகை தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுக வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும், அதிமுகவின் வாக்குகள் சிதறும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் கட்சியின் பெயர் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அவர் தேர்தலில் தனித்து களம் காண போகிறாரா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க: “ரூ.1,020 கோடி ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?”.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக சரமாரி கேள்வி!!