சட்டமன்ற தேர்தல்… ஜனநாயக கடமை ஆற்றிய அரசியல் தலைவர்கள்!
Tamilnadu Assembly Election : தமிழக சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அந்த கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் தொகுதிக்குள்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினர் .

அரசியல் தலைவர்கள் வாக்குப்பதிவு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 23) காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். அதன்படி, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையிலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சேலம், சிலுவம்பாளையத்திலும், தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாலிகிராமத்திலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதே போல, நீலாங்கரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், மத்திய அமைச்சர் எல். முருகன் அவிநாசியிலும், முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான ப. சிதம்பரம் காரைக்குடியிலும் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
டிடிவி தினகரன், கே. ஏ.செங்கோட்டையன்
இவர்களைப் போல அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி. டி. வி. தினகரன் சென்னை அடையாறிலும், தமிழக வெற்றிக் கழக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்திலும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேனாம்பேட்டைலும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியிலும், தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளரும், விருத்தாச்சலம் தொகுதி வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த் விருகம்பாக்கத்திலும் வாக்குகளை பதிவு செய்தனர்.
மேலும் படிக்க: வாக்குப்பதிவு செய்த ரஜினிகாந்த்.. வாக்களிப்பதற்கு முன்னதாக சொன்ன முக்கிய அட்வைஸ்!
தவெக தலைவர் விஜய் – அன்புமணி ராமதாஸ்
இதே போல, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நீலாங்கரையிலும், தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தில் உள்ள பி எஸ் ஜி கல்லூரியிலும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையிலும், முன்னாள் முதல்வரும், போடிநாயக்கனூர் திமுக வேட்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் அதே சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குகளை செலுத்தினர்.
அமைச்சர்கள் – முன்னாள் அமைச்சர்கள்
இதே போல, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் கீதா ஜீவன், தேமுதிகவின் விருதுநகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். முன்னதாக முதல்வர் மு க ஸ்டாலின் தனது வாக்கை பதிவு செய்த பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் எப்படி ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கிறேனோ. அதேபோல, தமிழக மக்களும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை கண்டிப்பாக ஆற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து ஒரே வார்த்தையில் கூறுகிறேன். தமிழ்நாடு மீண்டும் வெல்லும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: விறுவிறுப்பான தொடக்கம்.. தமிழகத்தில் காலை 9 மணி வரை 17.69 சதவீத வாக்குகள் பதிவு..