யாருடன் கூட்டணி.. ராமதாஸ் தலைமையில் நிர்வாகக் குழு அவசர கூட்டம்.. முக்கிய அறிவிப்பு வெளியாகிறது?
PMK Executive Committee Meeting: ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி குறித்த முடுவெடுப்பது தொடர்பாக கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்களுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இன்று இரவுக்குள் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

ராமதாஸ் தலைமையில் நிர்வாக குழு கூட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் போக்கின் காரணமாக கட்சியினர் இரு பிரிவாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதில், கட்சியின் தலைவர் அன்புமணி தரப்பிலான பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. ராமதாஸ் தரப்பிலான பாமக அன்புமணிக்கு எதிரான நடவடிக்கையிலும், கட்சியை மீட்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது. இதனுடன் சேர்த்து, தேர்தலில் எந்த கூட்டணியுடன் இணையலாம் என்ற வகையில் திட்டம் தீட்டி வருகிறது. இதில், ஏற்கனவே அன்புமணி தரப்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், அதே கூட்டணியில் ராமதாஸ் தரப்பு இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனை, அதிமுக தலைமையும் விரும்பவில்லை என்று தெரிகிறது. இதே போல, திமுக கூட்டணியில் இணைவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
ராமதாஸ் தலைமையில் நிர்வாக குழு அவசர கூட்டம்
இவ்வாறாக, ராமதாஸ் தரப்பிலான பாமகவுக்கு நாலா புறமும் நெருக்கடிகள் எழுந்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 22) நிர்வாக குழு அவசர கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாமகவைச் சேர்ந்த 21 நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன், நிறுவனர் ராமதாஸ் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில், வருகிற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது உள்ளிட்டவை தொடர்பாக ராமதாஸ் இறுதி கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: “உங்கள் வீட்டு பில்லே சாட்சி”.. கையடக்க பிரிண்டருடன் வளம் வரும் அதிமுகவினர்.. திமுகவுக்கு எதிராக புதிய பிரசாரம்..
பாமக கூட்டணி தொடர்பாக ராமதாஸ் அறிவிப்பு
அதன்படி, இன்று யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை ராமதாஸ் வெளியிட இருப்பார் என்று தைலாபுரம் வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையே, இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் தெரிவித்திருந்தது. இதனால், ராமதாஸுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்கும் வரை தேர்தல் தேதியை அறிவிக்க கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கூட்டணி குறித்த அறிவிப்பில் இழுபறி
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதனால், பாமக நிறுவனர் ராமதாஸ் கையறு நிலையில் இருந்து வந்தார். இதன் காரணமாக, யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பான முடிவு எடுப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்காக நிர்வாக குழு உறுப்பினர்களுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இன்று இரவுக்குள் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க: வழக்கு போடுவியா? போடு நாங்கள் பார்க்காத மிசாவா? மதுரையில் மு.க.ஸ்டாலின் பேச்சு