ரூ.5 ஆயிரம் உதவித்தொகை – பயிர் கடன் தள்ளுபடி.. இன்னும் ஏராளமான வாக்குறுதிகள்.. பாமக தேர்தல் அறிக்கையில் தகவல்!
Pmk Election Manifesto : தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். பட்டப்படிப்பு படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 உதவித் தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளை பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டார்.

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
சென்னை தியாகராய நகரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டார். இதில், எங்களுடைய தேர்தல் அறிக்கையை தான் மிகச்சிறந்த அறிக்கை இன்று அனைவரும் அறிவர். எங்கள் தேர்தல் அறிக்கையை பார்த்து தான் திமுக காப்பியடித்துள்ளது. தமிழகத்தில் 1.30 கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். அவர்களில் முதலில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். 2026- 27, 2027-28 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் 2.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும். டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 4 தேர்வுக்கு 35 ஆயிரம் பேர், குரூப் 2 தேர்வுக்கு 10 ஆயிரம் பேர், 40 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள்.
1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு
போக்குவரத்து துறை 10 ஆயிரம் பேர், மின்சார துறைக்கு 16 ஆயிரம் பேர், மருத்துவ துறைக்கு 7 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்படுவார்கள். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை அல்லது தனியார் வேலை உறுதி செய்யப்படும். பட்டப் படிப்பு முடித்து வேலை வாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். மொத்தமாக பாமக அறிக்கையின் படி அரசு, தனியார், சுய தொழில் ஆகியவற்றில் சுமார் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
மேலும் படிக்க: எம்எல்ஏ பதவியில் 9 முறை… அமைச்சர் பதவியில் 6 முறை… அருப்புக்கோட்டையில் வெற்றியை பறைசாற்றுவாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு போதை பொருள் ஒழிப்பு தடுப்பு பிரிவு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அந்த அமைப்புக்கு டிஜிபி அளவில் அதிகாரிய நியமனம் செய்யப்படுவார். கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். போதைப்பொருள் நடமாட்டம் குறித்த தகவல் தெரிவிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண் அறிவிக்கப்படும். இது குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
பயிர் கடன் தள்ளுபடி
ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்யப்படும். நெல் முதல் எள் வரை காய்கறி உள்ளிட்ட பொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படும். தமிழ்நாடு வேளாண் துறை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 5% வளர்ச்சி அடைவதற்கு உறுதி செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். ஈடுபொருட்கள் மானியமாக ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ரூ.30000 மானியமாக வழங்கப்படும். நிதியில் 25 விழுக்காடு வேளாண் சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும். நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு நாட்டு சர்க்கரை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க: தேர்தலுக்குப் பின் விஜய்யுடன் பாஜக கூட்டணி.. NDA ஆட்சி அமையும்.. ராம்தாஸ் அத்வாலே உறுதி!!