தேஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது… நயினார் நாகேந்திரன் அளித்த பதில்!
NDA Seat Sharing Talks : தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது தொடங்கப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்ற கேள்விக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார் .

தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடு எப்போது
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை விரைவில் தொடங்க இருப்பதாகவும், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணியில் ஏற்கனவே அங்கம் வகித்து வந்த கட்சிகள் தான் அப்படியே தொடர்கின்றன. புதிதாக ஒரு கட்சி மட்டும் அது கூட்டணியில் இணைந்துள்ளது. அதுவும் மின்னல் வேகத்தில் வந்து விட்டு, மின்னல் வேகத்தில் மறைந்து விடும். திமுக ஆட்சியில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியை உறுப்பினர்களின் உரைகள் பகுதியளவு நீக்கம் செய்யப்படுகின்றன. சமூக வலைதளங்களில் திமுகவுக்கு ஆதரவாக பதிவிட்டால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஆனால், அவர்களுக்கு எதிராக பதிவிட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
பிரதமரை கொலை செய்ய வேண்டும் என்று திமுக முக்கிய நிர்வாகி கூறினார்
திமுகவை சேர்ந்த முக்கியமான தலைவர் ஒருவர் பிரதமரை கொலை செய்ய வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அவர் மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் தொகுதி பங்கீடு குறித்து பேசியது சாதாரணமானது தான். இவர்கள் அனைருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளன.
மேலும் படிக்க: திமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் 161 நாள்கள் மட்டுமே சட்டமன்றம் கூடியுள்ளது.. இது 73 ஆண்டு கால வரலாற்றில் மிகவும் குறைவாகும்!
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படாதது மன வருத்தம்
தமிழகத்தில் பலமுனை போட்டி உள்ளதா. பலம் பொருந்திய போட்டி உள்ளதா என்பதை மக்கள் தான் கூற வேண்டும். உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும் கூட திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை என்ற மன வருத்தம் அனைவரது மனதிலும் உள்ளது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்காக இறைவனை வேண்டுவதற்கு அனைத்து பகுதிகளிலும் இன்று மாலை 6 மணிக்கு ஒன்றாக இணைந்து கந்த சஷ்டி கவசம் படிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம்.
திமுக ஆட்சியில் அனைத்த விவகாரங்களிலும் பாரபட்சம்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது எங்களது விருப்பமாகும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகவும் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும் என்றும் அனைத்த தரப்பு பொது மக்களிடமும் இந்த கோரிக்கையை நாங்கள் வைத்துள்ளோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் அனைத்து விவகாரங்களிலும் பாரபட்சம் பார்க்கப்பட்டு வருகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!