K.S.Masthan Tamil Nadu Election: செஞ்சி தொகுதியில் 2 முறை வெற்றியை பதிவு செய்தவர்… மீண்டும் களமிறக்கப்படுவாரா கே.எஸ்.மஸ்தான்?
Tamil Nadu Elections 2026: திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கடந்த இரு சட்டமன்ற தேர்தல்களில் செஞ்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ பதவியை அடைந்த செஞ்சி கே.எஸ். மஸ்தான் மீண்டும் அதே தொகுதியில் களமிறக்கப்படுவாரா திமுக தலைமையின் திட்டம் என்னவாக உள்ளது.

செஞ்சி தொகுதியில் மீண்டும் களமிறக்கப்படுவாரா கே.எஸ்.மஸ்தான்
திராவிட முன்னேற்றக் கழகத்தில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டப்பேரவை உறுப்பினராகவும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருபவர் செஞ்சி கே. எஸ். மஸ்தான். இவர், கடந்த 1955- ஆம் ஆண்டு மே மாதம் 31- ஆம் தேதி காஜா பாஷா- ஜூலேகா பி தம்பதிக்கு மகனாக பிறந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் மீதான ஈர்ப்பின் காரணமாக கடந்த 1976- ஆம் ஆண்டு அந்தக் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர், 1978- ஆம் ஆண்டு செஞ்சி பேரூர் கழக செயலாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து கட்சி பணியாற்றிய செஞ்சி கே. எஸ். மஸ்தான் 1980- ஆம் ஆண்டு பொதுக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர், 1992- ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, 1996- ஆம் ஆண்டு மாநில செயற்குழு உறுப்பினராக உயர்ந்தார்.
எம்எல்ஏ பதவியை எளிதாக எட்டிப்பிடித்த செஞ்சி கே.எஸ்.மஸ்தான்
கடந்த 1999- ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட அவைத் தலைவராக நியமிக்கப்பட்ட செஞ்சி கே. எஸ். மஸ்தான், 2014- ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்து வருகிறார். இவ்வாறாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் கட்சிப் பணியாற்றி வரும் செஞ்சி கே. எஸ். மஸ்தான், கடந்த 2016- ஆம் ஆண்டு இதே தொகுதியில் களமிறக்கப்பட்டார். பிறந்து வளர்ந்த இதே தொகுதியில் செல்வாக்குடைய செஞ்சி கே. எஸ். மஸ்தான் எம்எல்ஏ பதவியை எளிதாக கைப்பற்றினார்.
மேலும் படிக்க: Tamil Nadu Assembly Election: இனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க முடியாது! விவரம் உள்ளே!
2- ஆவது முறை எம்எல்ஏ பதவியை தக்க வைத்த மஸ்தான்
இதே போல, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் களம் இறக்கப்பட்ட செஞ்சி கே. எஸ். மஸ்தான் 2-ஆவது முறை எம். எல். ஏ. பதவியை எட்டிப்பிடித்தார். இதில், கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களமிறங்கிய செஞ்சி கே. எஸ். மஸ்தான் 88,440 வாக்குகள் பெற்று எம்எல்ஏ பதவியை அடைந்தார். இதே போல 2021 சட்டமன்ற தேர்தலில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 625 வாக்குகள் பெற்று எம்எல்ஏ பதவியே தக்க வைத்துக் கொண்டார்.
செஞ்சியில் மீண்டும் களமிறக்கப்படுவாரா கே.எஸ்.மஸ்தான்
அப்போது, முதல்வர் மு. க. ஸ்டாலின் அமைச்சரவையில் செஞ்சி கே. எஸ். மஸ்தானுக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தற்போது எம்எல்ஏவாக தொடர்ந்து வருகிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் செஞ்சி கே. எஸ். மஸ்தான் மீண்டும் களம் இறக்கப்படுவாரா கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் திமுக தலைமையிடம் மட்டுமே உள்ளது.
மேலும் படிக்க: TN Election: சென்னை: தேர்தலை புறக்கணிக்கும் துரைப்பாக்கம் மக்கள்.. காரணம் இதுதான்!