தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரலாறு: 1952 முதல் 2026 வரை…
Tamil Nadu Assembly Election: தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் வாக்குப்பதிவு சதவீதம் என்பது வெறும் எண்கள் மட்டுமல்ல, அது மக்களின் அரசியல் எழுச்சியின் குறியீடாகவும் பார்க்கப்படுகிறது. 1952 முதல் 2026 வரை தமிழகம் கடந்து வந்த தேர்தல் பயணத்தை விரிவான புள்ளிவிவரங்களுடன் இங்கே காண்போம்.
தமிழகத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் ஜனநாயகத் திருவிழாவாக எழுச்சியுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் தமிழக தேர்தல் வரலாற்றிலேயே ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் 17-வது சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தைப் பரீட்சிக்கக் களம் கண்டனர். இதற்காகத் தமிழகத் தேர்தல் ஆணையம் மாநிலம் தழுவிய அளவில் 75,064 வாக்குச்சாவடிகளை அமைத்து விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. காலையிலிருந்தே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
வாக்காளர் எண்ணிக்கையும் பாலின விகிதமும்
இந்தத் தேர்தலின் புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆக உள்ளது. இதில் பாலின வாரியாகப் பார்க்கும்போது, பெண்களின் பங்களிப்பு ஆண்களை விட சற்று அதிகமாகவே உள்ளது. மொத்த வாக்காளர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்களும், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்களும் ஆவர். மேலும், 7,728 மூன்றாம் பாலினத்தவர்களும் இந்தத் தேர்தலில் தங்களின் வாக்கினைப் பதிவு செய்யத் தகுதி பெற்றிருந்தனர்.
தொடக்க கால தேர்தல்கள்: ஜனநாயகத்தின் முதல் காலடி (1952 – 1957)
சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் 1952-ல் நடைபெற்றபோது, தமிழகத்தில் (அப்போதைய சென்னை மாகாணம்) 56.41% வாக்குகள் பதிவாகின. கல்வியறிவு மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் குறைவாக இருந்த அக்காலத்தில் இது ஒரு ஆரோக்கியமான தொடக்கமாகவே கருதப்பட்டது. ஆனால், அடுத்த தேர்தலான 1957-ல் இந்த சதவீதம் 46.84% ஆகக் குறைந்தது. இது தமிழக தேர்தல் வரலாற்றிலேயே பதிவான மிகக்குறைந்த வாக்கு சதவீதமாகும்.
அரசியல் மாற்றம் மற்றும் எழுச்சிக் காலம் (1962 – 1971)
1960-களில் தமிழக அரசியலில் மொழிப்போர் மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான அலை வீசியது. இதன் விளைவாக, 1962-ல் வாக்குப்பதிவு முதன்முறையாக 70 சதவீதத்தைக் கடந்து 70.65% ஆகியது. அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியைப் பிடித்த 1967 தேர்தலில், வரலாறு காணாத வகையில் 76.57% வாக்குகள் பதிவாகின. இது மக்களின் அரசியல் ஆர்வத்தை உலகுக்குக் காட்டியது. பின்னர் 1971-ல் இது 71.82% எனத் தொடர்ந்தது.
எம்.ஜி.ஆர். காலமும் அதன் பின்னரும் (1977 – 1991)
புதிய அரசியல் சக்தியாக எம்.ஜி.ஆர் உருவெடுத்த 1977 தேர்தலில் 61.58% வாக்குகளே பதிவாகின. இருப்பினும், அவர் மீண்டும் ஆட்சியைப் பிடித்த 1980 மற்றும் 1984 தேர்தல்களில் வாக்குப்பதிவு முறையே 70.74% மற்றும் 73.47% என அதிகரித்தது. 1989-ல் பலமுனைப் போட்டியின் போது 69.69% வாக்குகளும், ராஜீவ் காந்தி மறைவுக்குப் பின் 1991-ல் நடைபெற்ற தேர்தலில் 63.08% வாக்குகளும் பதிவாகின.
நவீன கால மாற்றங்கள் (1996 – 2021)
1996-ல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் போது 66.95% வாக்குகளும், 2001-ல் 59.07% வாக்குகளும் பதிவாகின. 2011-ம் ஆண்டு தேர்தல் ஒரு முக்கிய மைல்கல்லாகும்; அப்போது 78.02% வாக்குகள் பதிவாகி அனைவரையும் வியக்க வைத்தது. அதன் பிறகு 2016-ல் 74.81% மற்றும் 2021-ல் 73.63% என ஓரளவிற்கு நிலையான வாக்குப்பதிவு நீடித்தது.
2026: சரித்திர சாதனை படைத்த 85 சதவீதம்
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலான 2026-ல், தமிழகம் தன் முந்தைய சாதனைகள் அனைத்தையும் முறியடித்துள்ளது. 85% வாக்குப்பதிவு என்பது ஒரு மிகப்பெரிய ஜனநாயகப் புரட்சியாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ள ஒரு மாநிலத்தில், இத்தனை பெரிய சதவீதத்தினர் வாக்களித்திருப்பது, மக்கள் மாற்றத்தை நோக்கியோ அல்லது தங்களின் உரிமையை நிலைநாட்டவோ எவ்வளவு தீவிரமாக உள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.