திமுகவிடம் 10+1 தொகுதிக்கான பட்டியலை அளித்த தேமுதிக… எந்தெந்த தொகுதிகள் தெரியுமா!
DMDK Requests Assembly Seats: திராவிட முன்னேற்ற கழகத்திடம் 10 சட்டமன்ற தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களையும் தே மு தி க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த கேட்டுள்ளதாகவும், அது தொடர்பான பட்டியலை சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

திமுகவிடம் 10+1 தொகுதிகள் பட்டியலை அளித்த தேமுதிக
சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை, தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வியாழக்கிழமை ( பிப்ரவர் 19) நேரில் சந்தித்து அந்த கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளார். இந்த நிகழ்வை தொடர்ந்து, தேமுதிகவுக்கு 10 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதில், கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற தொகுதிகள், கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு அதிகளவு வாக்குகள் கிடைத்த சட்டமன்ற தொகுதிகள் ஆகியவற்றை ஒதுக்குமாறு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் ஒரு தொகுதி, சென்னையில் விஜயகாந்த் வீடு அமைந்திருக்கும் விருகம்பாக்கம் தொகுதி ஆகியவற்றை வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளது.
விஜயகாந்த எம்எல்ஏவாக இருந்த தொகுதி
இதே போல, கடந்த காலங்களில் விஜயகாந்த் எம்எல்ஏவாக இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் தொகுதி, கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் தொகுதி மற்றும் சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதி, தர்மபுரி டவுன் பகுதியில் தேமுதிக வெற்றி பெற்ற தொகுதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி சட்டமன்ற தொகுதி, தேமுதிகவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கக்கூடிய கோவில்பட்டி தொகுதி ஆகியவற்றை தேமுதிக தங்களுக்கு வழங்குமாறு வலியுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க: திமுக கூட்டணியில் தேமுதிக.. முதல்வருடன் பிரேமலதா சந்திப்பு
மு.க.ஸ்டாலினிடம் பட்டியலை சமர்ப்பித்த தேமுதிக
மேலும், மதுரை மாவட்டத்தை சேர்ந்த விஜயகாந்த் எளிய பின்னணியில் இருந்து வந்து மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்ததால், அந்த மாவட்டத்தில் ஒரு தொகுதியும் வேண்டும் என்று தேமுதிக கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பான ஒரு பட்டியலை முதல்வர் மு க ஸ்டாலின் இடம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ளார். முதல் முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில் அவர்கள் கேட்கும் தொகுதிகளை கொடுப்பதற்கு திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் பிரேமலதாவுக்கு முன்னுரிமை
அந்த வகையில், திமுக கூட்டணியில் ஒரு பெண் தலைவர் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், வருகிற மார்ச் 8- ஆம் தேதி திருச்சியில் நடைபெறக்கூடிய திமுக மாநாட்டில் பிரேமலதாவும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, விருகம்பாக்கம் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த பிரபாகராஜா எம்எல்ஏவாக இருந்து வருகிறார். அவரும் இந்த தொகுதியை கேட்டுள்ள நிலையில், யாருக்கு இந்த தொகுதி வழங்கப்படும் என்பதை திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி ஒதுக்கும் என்று தெரிகிறது. கடந்த தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு வேளச்சேரி தொகுதியை அளித்திருந்த நிலையில், தற்போது தேமுதிகவுக்கு விருகம்பாக்கம் தொகுதி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: “நிறைவேறிய விஜயகாந்த் விருப்பம்”..நெகிழ்ந்த பிரேமலதா.. பெரு மகிழ்ச்சி தெரிவித்த ஸ்டாலின்..