அதிமுக வெற்றிக்கு சாதகமான 5 தொகுதிகள்.. குறி வைத்து காய் நகர்த்தும் பாஜக.. நெருக்கடியில் எடப்பாடி!
BJP And AIADMK Seat Sharing Talks: தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தலைமையிடம் சென்னையில் 5 தொகுதிகளை பாஜக கேட்டு வருகிறது. இந்த தொகுதிகள் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பை கொடுக்கக் கூடிய தொகுதியாக இருந்து வருகிறது. இதனால், அதிமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னையில் அதிமுக வெற்றி வாய்ப்புள்ள 5 தொகுதிகளை கேட்கும் பாஜக
தமிழகத்தில் ஏப்ரல் 23- ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் மே 4- ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றியை மையமாக வைத்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்து தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. எதிர்க் கட்சியான திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை மார்ச் 17- ஆம் தேதி வேட்பாளர்கள் நேர்காணலும் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது வரை தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைமை வகிக்கும் அதிமுகவிடம், பாஜக சுமார் 40 தொகுதிகளுக்கு மேல் கேட்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதில், பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை அதிமுக தலைமையிடம் பாஜக அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் 5 தொகுதிகளை கேட்கும் பாஜக
இதில், சென்னை மாவட்டத்தில் முக்கியமான தொகுதிகளில் மயிலாப்பூர், வேளச்சேரி, தியாகராய நகர், விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கு ஆகிய 5 தொகுதிகளை பாஜக கேட்பதாக கூறப்படுகிறது. இந்த தொகுதிகளை பாஜக கேட்பது அதிமுகவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் அதிமுக 4,352 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டிருந்தது. இதே போல, மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 55,759 ஓட்டுகள் பெற்றதுடன் குறிப்பிடத்தக்க சதவீதத்தையும் பெற்றிருந்தது.
மேலும் படிக்க: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்த அதிமுக.. இபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு!!
5 தொகுதிகளில் வெற்றியை நிலைநிறுத்த அதிமுக திட்டம்
தியாகராய நகர் தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி வாய்ப்பை பரிதாபமாக இழந்து இருந்தது. விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக தோல்வியை சந்தித்து இருந்தாலும், 55,526 வாக்குகள் பெற்றிருந்தது. ஆயிரம் விளக்கும் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியிட்டிருந்தார். இதனால், சொற்ப வாக்குகளில் கைநழுவி சென்ற 5 தொகுதிகளையும் வரும் தேர்தலில் கைப்பற்றுவதற்கு அதிமுக திட்டமிட்டுள்ளது.
5 தொகுதிகளை கேட்டு காய் நகர்த்தும் பாஜக
இதற்காக மேற்கண்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இதில், குறிப்பிட்ட சிலரை அடையாளப்படுத்தி 5 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை அதிமுக தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிமுகவின் வெற்றிக்கு சாதகமாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளை பாஜக கேட்டு வலியுறுத்தி வருவது அதிமுக தலைமைக்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, பாஜகவும் இந்த தொகுதிகளை குறி வைத்து காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: திமுக கூட்டணியில் இருந்து விலக தவாக முடிவு?.. பரபரப்பை கிளப்பிய வேல்முருகன்..