“நோட்டாவுக்கு சென்ற வாக்குகள் தவெகவுக்கு கிடைக்கலாம்”.. திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.. ஆர்.எஸ்.பாரதி திட்டவட்டம்!!
Tamilnadu Assembly Election: திமுகவிற்கு இந்தத் தேர்தலில் 42% முதல் 45% வரை வாக்குகள் உறுதியாகக் கிடைக்கும் என்று அவர் கணித்துள்ளார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் பிடிக்காதவர்கள் நோட்டாவிற்குப் பதில் ஒரு மாற்று சக்தியாக டிவிகே-விற்கு வாக்கு அளித்திருக்கலாம், இது திமுகவின் வாக்குகளைப் பாதிக்காது என்பதே அவரது கருத்தாக உள்ளது.
விஜய்யின் தவெக பெறும் வாக்குகளால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து இந்த 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது குறித்து பல்வேறு நிறுவனங்களும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இதில், பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதாகவும், அதிமுக கணிசமான இடங்களை பெறும் என்றும், தவெகவுக்கு இரட்டை இலக்க தொகுதிகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், அதிமுக முன்னிலை பெறுவதாக சில கருத்து கணிப்புகளும், தவெக ஆட்சி அமையும் என்று ஒரு கருத்து கணிப்பும் கூறுகிறது. அதன்படி, தவெகவினருக்கும், அதிமுகவினருக்கும் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் பேரிடியாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க: வெற்றிப்பெற்று நேராக பனையூர் வாருங்கள்.. நான் காத்திருப்பேன் – வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை..
கருத்துக்கணிப்புகளில் தமக்கு உடன்பாடு இல்லை:
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுகவின் வெற்றி வாய்ப்புகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தமக்கு உடன்பாடு இல்லை என்று குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி, திமுகவின் கள நிலவரப்படி கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக, மற்ற கூட்டணிக் கட்சிகளின் உதவி இன்றி திமுக தனித்தே குறைந்தபட்சம் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அவர் கூறினார்.
தவெக ஒரு மாயை:
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்துப் பேசிய அவர், “தவெக என்பது ஒரு மாயை மட்டுமே” என்று விமர்சித்தார். ‘வெற்றுப் பாத்திரம் தான் அதிக சத்தம் போடும்’ என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டிய அவர், அக்கட்சியினர் எழுப்பும் சத்தம் தேர்தல் களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றார். தேர்தலன்று காலை ஒரு மணி நேரம் மட்டுமே அந்தப் பரபரப்பு காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
வாக்கு சதவீதக் கணக்கு:
திமுகவிற்கு இந்தத் தேர்தலில் 42% முதல் 45% வரை வாக்குகள் உறுதியாகக் கிடைக்கும் என்று அவர் கணித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கக்கூடிய வாக்குகள் குறித்துப் பேசியபோது, கடந்த தேர்தலில் பதிவான ‘நோட்டா’ (NOTA) வாக்குகள் தான் தற்போது அக்கட்சிக்குச் செல்லும் என்று அவர் தெரிவித்தார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் பிடிக்காதவர்கள் நோட்டாவிற்குப் பதில் ஒரு மாற்று சக்தியாக டிவிகே-விற்கு வாக்கு அளித்திருக்கலாம், இது திமுகவின் வாக்குகளைப் பாதிக்காது என்பதே அவரது கருத்தாக உள்ளது.
தேர்தல் முடிவுகள் வந்த பிறகுதான் யார் எவ்வளவு வாக்குகள் பிரித்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியும் என்றும், திமுகவின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தீவிரம்.. மே 2ல் தமிழகம் வரும் வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள்!!