நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு குறி.. அதிமுக-அமமுக இடையே கடும் போட்டி.. யார் வசம் செல்கிறது!
Nanguneri Assembly Constituency: நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குனேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு அதிமுக மற்றும் அமமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதில், எந்தக் கட்சியின் வசம் நாங்குனேரி சட்டமன்ற தொகுதி செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாங்குனேரி தொகுதிக்கு அதிமுக-அமமுக குறி
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. இந்த கூட்டணியில் கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இழுபறியில் இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று ஒவ்வொரு கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதியில் என்பது வருகின்ற நாட்களில் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இறுதி செய்யப்படும். இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரு கட்சிகளும் குறி வைத்து வருகின்றன. ஏனென்றால், இந்த சட்டமன்ற தொகுதியில் மறவர் சமுதாயத்தை சேர்ந்த வாக்குகள் கணிசமாக இருப்பதால் அதனை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் வலியுறுத்தி வருகிறார்.
வெற்றியை குறி வைத்து அமமுக பொதுக்கூட்டம்
இதனிடையே, கடந்த மாதம் அமமுக சார்பில் நாங்குநேரியில் மிகப்பெரிய அளவிலான பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. இதுவும் தொகுதியை பெறுவதற்கான மற்றும் வெற்றி அடைவதற்கான அச்சாரம் என கூறப்பட்டது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளராக இருக்கும் இசக்கி முத்து மற்றும் கடந்த 2019 இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரெட்டியார்பட்டி நாராயணனும் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. இவர், நாடார் சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அனைத்து தரப்பு மக்களிடமும் நற்பெயரை பெற்றுள்ளார்.
மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தல் 2026: திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு
கணிசமான வாக்குகளை பெற்றிருந்த அமமுக வேட்பாளர்
மேலும், 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி ஆர். மனோகரனை தோற்கடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார் ரெட்டியார்பட்டி நாராயணன். இதேபோல, கடந்த 2021- சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த அதிமுக திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவும் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட பரமசிவ ஐயப்பன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வீரபாண்டி ஆகியோர் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தனர்.
யார் வசம் செல்லப்போகிறது நாங்குனேரி தொகுதி
ஆனால், இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர். மனோகரன் வெற்றியை தட்டி சென்றிருந்தார். இதில், பரமசிவாய ஐயப்பன் மற்றும் வீரபாண்டி ஆகியோர் வாக்குகளை பிரித்ததன் காரணமாகவே, கணேசராஜாவுக்கான வெற்றி வாய்ப்பு நழுவி சென்றிருந்தது. இந்த நிலையில், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் அல்லது தச்சை கணேசராஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் இசக்கி முத்துவை களம் இறக்க திட்டம் தீட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தொகுதி யார் வசம் செல்லப்போகிறது என்பது விரைவில் தெரிய வரும்.
மேலும் படிக்க: அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் அதிருப்தி.. கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் பேச்சுவார்த்தை புறக்கணிப்பு..