வாக்களிக்க சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பிக்கும் கிளாம்பாக்கம்..
வெளியூர்களில் வசிக்கும் மக்கள் வாக்களிக்க தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் திரளாக கூடியுள்ளனர். இதனால் கிளாம்பாக்கம் மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது.
சென்னை, ஏப்ரல் 22, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு வாக்களிக்கச் செல்கின்றனர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த சில நாட்களாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து, மக்கள் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்யத் தயாராகி வருகின்றனர்.
வாக்களிக்க சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்:
அந்த வகையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் வாக்களிக்க தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இதனால் சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் திரளாக கூடியுள்ளனர்.
இதனால் கிளாம்பாக்கம் மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது. வாக்களிக்கச் செல்லும் மக்களுக்கு வசதியாக போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் கூட்டம் அலைமோதுவதோடு, ரயில் நிலையங்களிலும் மக்கள் திரள் அதிகரித்துள்ளது. முன்பதிவு இல்லா பெட்டிகளில் நிற்கக்கூட இடமில்லாத அளவிற்கு கூட்டம் காணப்படுகிறது.
மேலும் படிக்க: நாளை நடக்கும் ஜனநாயக திருவிழா.. தலைமை செயலகத்தில் உயர் சிறப்பு கட்டுப்பாட்டு அறை..
ஸ்தம்பிக்கும் ரயில் நிலையம் – பேருந்து நிலையம்:
நேற்று முதல் மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்லும் நிலையில், இன்றும் அதே நிலை தொடர்கிறது. பண்டிகைக் காலங்களில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது போலவே, தற்போது வாக்களிக்க மக்கள் பயணம் மேற்கொள்கிறார்கள்.
இந்த முறை இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களிக்கச் செல்ல தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இரவு 9.05 மணிக்கு முன்பதிவு இல்லாத மெமு (MEMU) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை காலை 8.45 மணிக்கு மதுரையை சென்றடையும்.
ஜனநாயக திருவிழா நாளை நடைபெற உள்ள நிலையில், மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றத் தயாராகி வருகின்றனர்.