யுபிஐ விதிகளில் புதிய மாற்றம்: Chargeback கோரிக்கையில் வங்கிகளுக்கு நேரடி அனுமதி!
UPI Transaction Rules Updated : யுபிஐ மூலம் செய்யப்படும் தவறான பணப்பரிவர்த்தனைகளின் போது இழந்த பணத்தை திரும்ப பெறும் முறை சிக்கலானதாக இருந்தது. இதனை எளிதாக்கும் விதமாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. தவறான பரிவர்த்தனைகளின் போது இழக்கும் பணத்தை திரும்ப அளிப்பது தொடர்பாக, இனி வங்கிகளே நேரடியாக முடிவெடுக்கலாம் என அறிவித்துள்ளது.

மாதிரி புகைப்படம்
வாடிக்கையாளர் யுபிஐ (UPI) மூலம் ஒரு தவறான பணப்பரிவர்த்தனை செய்து, அந்த பணத்தை திரும்ப பெற கோரிக்கை விடுக்கும்போது, சில சமயங்களில் கோரிக்கை மறுக்கப்படுகிறது. ஆனால் உங்கள் கோரிக்கை குறித்து நடைபெறும் பரிசோதனையில், அவை உண்மையானது என நிரூபிக்கப்பட்டால், அதனை மீண்டும் பரிசீலிக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்திடம் (NPCI) அனுமதி பெற வேண்டியது இருந்தது. இந்த செயல்முறை, URCS (Unified Real-time Clearing and Settlement) என்ற இணையதள மூலம் மட்டுமே செய்ய வேண்டியதாய் இருந்தது. இந்த நிலையில் யுபிஐ சேவையில் நடைபெறும் பணத்தை திரும்ப பெறும் கோரிக்கை விதிகள் தற்போது மாற்றப்பட்டுள்ளன. இந்த நிலைையில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்ட அறிவிப்பில் புதிய மாற்றம் வருகிற ஜூலை 15, 2025 அன்று நடைமுறைக்குவரவிருக்கிறது.
புதிய விதியில் என்ன மாற்றம்?
புதிய விதியின் படி, யுபிஐ மூலம் தவறாக செலுத்தப்படும் பணத்தை திரும்ப பெற வைக்கப்படும் கோரிக்கையில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் அனுமதி பெர தேவையில்லை. அதற்கு பதிலாக வங்கிகள் தாங்களாகவே, நன்மதிப்பின் அடிப்படையில் பணத்தை திரும்பெறும் கோரிக்கையை பதிவு செய்ய முடியும். குறிப்பாக வாடிக்கையாளர் உண்மையாகவே தவறாக பணம் அனுப்பியுள்ளார் என தெரிய வரும்போது இதனை செய்ய முடியும். இது யூர்சிஎஸ் முறையில் கோரிக்கை நிராகரிக்கப்படும் போது மட்டுமே இந்த நடைமுறை பொருந்தும். இந்த நேரங்களில் வங்கிகள் நேரடியாக முடிவெடுக்கலாம். குறிப்பாக பலமுறை பணத்தை திரும்ப பெறும்போது சில நேரங்களில் வாடிக்கையாளரின் கோரிக்கை மறுக்கப்படலாம். அந்த நேரங்களில் இந்த முறையில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு உதவும்.
பணத்தை திரும்ப பெறும் கோரிக்கை தொடர்பாக என்பிசிஐயின் அறிவிப்பு
முக்கிய கட்டுப்பாடுகள்
இந்த நிலையில் 30 நாட்கள் அடிப்படையில் ஒரு வாடிக்கையாளர் மொத்தமாக 10 முறை மட்டுமே பணத்தை திரும்ப பெற கோரிக்கை வைக்க முடியும். அதே போல ஒருவருக்கு அனுப்பப்பட்ட பணத்தை திரும்பெற 5 முறை மட்டுமே அனுமதிக்கப்படும். தேசிய கொடுப்பனவு கழகம் வங்கிகளுக்கு இந்த புதிய விதிகளை உடனடியாக பின்பற்றி சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு தகவலை பரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்த விதிமுறை மாற்றம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது. அதே நேரம், இந்த முறையை தவறாக பயன்படுத்தும் பலரை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவும் இது செயல்பட உள்ளது. மேலும் தவறான பணப்பரிவர்த்தனைகளில் பணத்தை திரும்ப பெறும் நடைமுறை சிக்கலாக இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இந்த நிலையில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் இந்த நடைமுறையை மிகவும் எளிதாக மாற்றியிருக்கிறது. இதன் மூலம் வங்கிகளே நேரடியாக நடைமுறை எடுக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.