UPI பரிவர்த்தனைகளில் அதிகரிக்கும் மோசடிகள் – பாதுகாப்பாக இருப்பது எப்படி?
UPI Scam Alert : யுபிஐ செயலிகள் நமது பணப்பரிவர்த்தனைகளை எளிதாக மாற்றினாலும் அதிலும் ஆபத்துகளும் அதிகம். கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் முறையில் ரூ. 733.26 கோடி இழப்பு ஏறப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

யுபிஐ எனப்படும் (UPI) எனப்படும் யுனிபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் மூலம் இந்தியர்கள் செய்யும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக சமீபத்திய புள்ளிய விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த மே 2025 மாதத்தின் போது மட்டும் யுபிஐ மூலம் 18.68 பில்லியன் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.24.77 லட்சம் கோடி என கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் யுபிஐ மூலம் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகள் 33 சதவிகிதம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. யுபிஐ மூலம் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகள், பணத்தை நேரடியாக கையாள்வதில் உள்ள ஆபத்தை குறைத்தாலும், டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்திருக்கிறது. நேரடியாக பணத் திருட்டு போன்றவற்றை எதிர்கொள்வதை விட டிஜிட்டல் முறையில் பணத்தை இழப்பதை கையாள்வது மிகவும் சிக்கலானது.
அதிகரிக்கும் டிஜிட்டல் மோசடிகள்
கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் முறையில் ரூ. 733.26 கோடி இழப்பு ஏறப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 – 2023 நிதி ஆண்டில் நடைபெற்ற 6, 699 மோசடிகளில் ரூ.69.68 கோடியும், 2023 முதல் 2024 நிதி ஆண்டுகளில் நடைபெற்ற 29,082 மோசடிகளில் ரூ.177.05 கோடியும், 2024 ஆண்டு டிசம்பர் மாதம் வரை நடைபெற்ற 13,384 மோசடிகளில் ரூ.107.21 கோடியும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு இது இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.




யுபிஐ ஆப்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி ?
Got a message saying you’ve won a lottery you never entered?
That’s not luck, it’s a scam.Fraudsters send fake prize messages asking for your PIN. Once you share that, your money’s gone.
✅ Never share UPI PIN or OTP
✅ Don’t pay to claim any prize
✅ Block and report… pic.twitter.com/i96S3dPQeB— UPI (@UPI_NPCI) June 6, 2025
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் அதில் சிக்கல்களும் அதிகரிக்கின்றன. டிஜிட்டல் மோசடிகள், பிஷிங் (Phishing) எனப்படும் சைபர் தாக்குதல், ஓடிபி திருட்டு, ஏஐ மூலம் போலி அடையாளங்களை உருவாக்கி மோசடி என இவை தனிநபர்கள் மட்டுமின்றி நிறுவனங்களையும் குறிவைத்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. யுபிஐ பேமெண்ட் செயலிகள் பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
-
எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப்பில் வரும் சந்தேகத்துக்குரிய லிங்க்குகளை கிளிக் செய்யவேண்டாம்.
-
பணம் அனுப்புவதற்கு முன், நீங்கள் அனுப்பும் நபர் சரியானவரா என உறுதிப்படுத்துங்கள். அதாவது அவரது யுபிஐ ஐடி சரியானதா என ஒருமுறைக்கு இருமுறை பரிசோதனை செய்யவும்.
-
மோசடியில் சிக்கினால், உடனடியாக உங்கள் யுபிஐ ஐடியை முடக்கி, உங்கள் வங்கிக்கு புகார் அளிக்கவும்.
-
ஓடிபியை யாருக்கும் பகிர வேண்டாம். வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று சொன்னால் கூட உங்கள் ஓடிபி-யை யாருக்கும் பகிரக் கூடாது.
யுபிஐ மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நமக்கு பல வழிகளில் உதவினாலும் அதன் பாதுகாப்பு குறித்து கவனமுடன் இருக்க வேண்டும். நமது சிறிய கவனக்குறைவால் பெரிய இழப்புகளை சந்திக்கலாம். எனவே பாதுகாப்பான முறையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வோம்.