இனி UPI மூலம் ஸ்பீடா பணம் அனுப்பலாம் – வரவிருக்கும் புதிய அப்டேட்!
UPI System Upgrade : பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய யுபிஐ (UPI) சேவை, இன்று கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு பெரும் உதவிகரமானதாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் ஜூன் 16, 2025 முதல் பரிவர்த்தனையை எளிதாக்க புதிய மாற்றம் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

இந்தியாவில் பணப்பரிவர்த்தனைகளை மிகவும் எளிதாக மாற்றியிருக்கிறது யுபிஐ (Unified Payments Interface) முறை. இந்த முறையில் வங்கிக் கணக்குகள் (Bank Account), ஐஎஃப்எஸ்சி எண் போன்றவை தேவையில்லை. ஒரே கிளிக்கில் நாம் பணம் அனுப்ப விரும்புபவர்களுக்கு பணம் சென்று விடும். மளிகைக் கடைகள் முதல் ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் இதன் மூலம் பண் செலுத்த முடியும். ஆனால் இதில் சில சிக்கல்களும் இருந்தன. பரிவர்த்தனை தாமதமாவது, நெட்வொர்க் பிரச்னைகளால் பணம் அனுப்ப முடியாமல் போவது போன்ற சிக்கல்களை வாடிக்கையாளர்கள் எதிர்கொண்டனர். இந்த நிலையில் இந்த பிரச்னைகளை சரி செய்யும் வகையில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) புதிய மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளது.
யுபிஐ முறையில் வரவிருக்கும் மாற்றம்
தற்போது பரிவர்த்தனைகளின் நிலையை சரிபார்ப்பதற்கும், பணத்தை திருப்பி அனுப்பும் (reversal) செயல்களுக்கும் 30 நொடிகள் ஆகும். ஆனால் பிசினஸ் டுடேவில் வெளியான கட்டுரையின் படி புதிய மாற்றத்திற்குப்பின் இது வெறும் 10 நொடிகளாக குறைக்கப்படும். இதனால் இனி பணம் அனுப்புவதும் பெறுவதும் மெதுவாக இருக்காது. மேலும் பணப்பரிவர்த்தனை விரைவாக நடக்கும் என்பதால் யுபிஐ பயனர்களுக்கு மேலும் சிறந்த அனுபவம் கிடைக்கும்.
சில நொடிகளில் பணம் அனுப்பலாம்
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், இந்த மாற்றங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன் படி பணம் அனுப்புவது மற்றும் பெறுவதற்கான செயல்கள் 30 நொடிகளிலிருந்து 10 நொடிகளாக குறைக்கப்படும். பணப்பரிவர்த்தனைகளை சரிபார்ப்பதற்கான நேரமும் 15 வினாடிகளிலிருந்து 10 நொடிகளாக மாற்றப்படும். இந்த மாற்றங்கள், இந்தியாவில் யுபிஐ வளர்ச்சி மற்றும் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த புதிய மாற்றம் 2025 ஜூன் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
யுபிஐ சேவைக்கு ஜிஎஸ்டி?
பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு யுபிஐ (UPI) முறையை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில், இந்த முறையில் மேற்கொள்ளப்படும் அனைத்து பண பரிவர்த்தனைகளுக்கும் எந்தவித கட்டணமும் விதிக்கப்படாது என்று அரசு உறுதியளித்தது. இந்த நிலையில் யுபிஐ மூலம் ரூ.2,000ஐ கடந்த பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி (GST) வரி வசூலிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிசீலித்து வருகிறார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. இதற்கு மத்திய நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை மறுத்தது. அதில், மத்திய அரசு ரூ.2,000 தாண்டும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க பரிசீலனை செய்கிறது என வெளியான தகவல்ககள் அனைத்தும் பொய் மற்றும் அடிப்படை ஆதாரமில்லாதவை என்று குறிப்பிட்டுள்ளது.