வீட்டு உபயோக சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. 3 மாதங்களில் 2வது முறையாக அதிகரிப்பு.. விலை விவரம்!
Domestic LPG cylinder price hiked: கடந்த மூன்று மாதங்களில் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த மார்ச் மாதம் 14 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலை அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகளின் குடும்ப பட்ஜெட்டில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில், நாடு முழுவதும் வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.29 உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று (ஜூன் 7) முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதி 14.2 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரிசர்வ் வங்கியின் லேட்டஸ்ட் ரெப்போ விவரம்!
தலைநகரில் புதிய விலை விவரம்:
இந்த அதிரடி விலை உயர்வால், தலைநகர் சென்னையில் இதுவரை ரூ.928.50க்கு விற்கப்பட்டு வந்த வீட்டு உபயோக சிலிண்டரின் விலை, தற்போது ரூ.957.50 ஆக அதிகரித்துள்ளது.
விலை உயர்விற்கான பின்னணி என்ன?
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் தொடர் பதற்றங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் தாக்கமே உள்நாட்டில் எரிபொருள் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் விலை உயர்ந்த போதிலும், அரசு பொதுமக்களைப் பெருமளவில் பாதுகாக்கும் நோக்கில் இறக்குமதி செலவை முழுமையாக மக்கள் தலையில் சுமத்தவில்லை. இருப்பினும், அரசு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வரும் கடுமையான நஷ்டத்தைக் குறைக்கும் பொருட்டே இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம்:
சமீபத்திய விலை உயர்வுக்கு முன்பாக, ஒவ்வொரு வீட்டு உபயோக சிலிண்டர் விற்பனையிலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.703 நஷ்டம் ஏற்பட்டு வந்ததாகத் தொழில் துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. தற்போது ₹29 உயர்த்தப்பட்ட போதிலும், நிறுவனங்களின் உண்மையான தயாரிப்பு/இறக்குமதி செலவுக்கும், விற்பனை விலைக்கும் இடையே உள்ள இடைவெளி முழுமையாகச் சரிசெய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலையும் உயர்வு:
சமையல் எரிவாயு மட்டுமின்றி, கடந்த சில வாரங்களாக மற்ற எரிபொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்து பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. மே மாத பாதியிலிருந்து கணக்கிட்டால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ஒட்டுமொத்தமாக ரூ.7.50 வரை அதிகரித்துள்ளது. அதேபோல், சிஎன்ஜி (CNG)வாகனங்களுக்குப் பயன்படும் சிஎன்ஜி எரிவாயுவின் விலை கிலோவுக்கு சுமார் ரூ.6 வரை உயர்ந்துள்ளது.
இவ்வளவு விலையேற்றத்திற்குப் பிறகும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு சுமார் ரூ.11ம், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.33.6ம் தற்போதும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: பே ஸ்லிப் இல்லை என்றால் கிரெடிட் கார்டு கிடைக்காதா?.. இத கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு:
தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் தற்போது சமையல் எரிவாயு விலை உயர்ந்து வருவதால், நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் மாதாந்திர செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, உள்நாட்டிலும் எரிபொருள் விலையை மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதால், வரும் நாட்களில் மேலும் சுமை கூடும் என்ற கவலை மக்களிடையே எழுந்துள்ளது.