ரஷிய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் திடீர் ‘யூ-டர்ன்’.. இந்தியாவிற்குப் பலன் கிடைக்குமா?
கடந்த வாரத்திலிருந்து ரஷிய கச்சா எண்ணெயின் விலை 2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு இல்லாத அளவிற்குப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் ரஷிய எண்ணெய் இறக்குமதி மூன்று மடங்கு அதிகரித்து 5.3 பில்லியன் யூரோக்களை எட்டியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக ரஷிய எண்ணெயை வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க, ரஷிய எண்ணெய் இறக்குமதி மீதான தடைகளில் அமெரிக்கா அதிரடியாகச் சில தளர்வுகளை வழங்கியுள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் எவ்வித விலக்கும் அளிக்கப்படாது என்று கூறியிருந்த அமெரிக்க கருவூலத் துறை, தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.
இதையும் படிக்க: மத்திய கிழக்கில் குறையும் பதற்றம்.. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறந்த ஈரான்..
அமெரிக்காவின் நிலைப்பாடு மாற்றம்:
கடந்த வாரம் வரை ரஷிய எண்ணெய் மீதான தடைகளில் எவ்வித சலுகையும் வழங்கப்படாது என்று அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். ஆனால், இரண்டே நாட்களில் வாஷிங்டன் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது. ஏற்கனவே கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷிய எண்ணெயை விற்பனை செய்யவும், விநியோகம் செய்யவும் வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதி, இப்போது மே 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதைத் தடுக்கவே இந்த ‘பொது உரிமத்தை’ அமெரிக்கா வழங்கியுள்ளது. ரஷிய எண்ணெயைப் பெருமளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதால், இந்த முடிவு இந்தியாவிற்குப் பெரும் சாதகமாக அமைந்துள்ளது.
எரிசக்திப் பாதுகாப்பு:
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 90% இறக்குமதியையே நம்பியுள்ளது. குறிப்பாக 40% எண்ணெய் ‘ஹார்முஸ் நீரிணை’வழியாகவே வருகிறது. போர் காரணமாக இந்தப் பாதையில் கப்பல்கள் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான சலுகை நாளை முடிவடைய உள்ள நிலையில், ரஷிய எண்ணெய்க்கான இந்த நீட்டிப்பு இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றத்தால் கப்பல்களுக்கான காப்பீட்டுத் தொகையும் அபாயமும் அதிகரித்துள்ள நிலையில், ரஷியாவிலிருந்து வரும் எண்ணெய் இந்தியாவிற்கு ஒரு மாற்று வழியாக அமையும்.
விலையேற்றமும் சவால்களும்:
கடந்த காலங்களில் ரஷியாவிடமிருந்து இந்தியா பெற்று வந்த அதீத தள்ளுபடி விலையில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்திலிருந்து ரஷிய கச்சா எண்ணெயின் விலை 2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு இல்லாத அளவிற்குப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
மேலும் படிக்க: இந்தியாவுக்கு நெருக்கடி.. ரஷ்யா – ஈரான் எண்ணெய் இறக்குமதிக்கான அமெரிக்காவின் சலுகை ரத்து!
கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் ரஷிய எண்ணெய் இறக்குமதி மூன்று மடங்கு அதிகரித்து 5.3 பில்லியன் யூரோக்களை எட்டியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக ரஷிய எண்ணெயை வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
பணவீக்கத்தில் தாக்கம்:
அமெரிக்காவின் இந்தத் தற்காலிகத் தளர்வு, போர்க்காலத்தில் இந்தியாவின் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க உதவும். இருப்பினும், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அது உள்நாட்டுப் பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இருந்தபோதிலும், ரஷிய கச்சா எண்ணெய்க்கான அனுமதி கிடைத்துள்ளது இந்தியாவின் பொருளாதார நலன்களுக்கு ஒரு தற்காலிக வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.