Donald Trump : ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக்கூடாது?.. டொனால்ட் டிரம்ப் பரபரப்பு கருத்து!
Trump Questions Regime Change in Iran | ஈரானின் அணு உலகைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் மிகுந்த கோபத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில், ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக்கூடாது என்று டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்கா, ஜூன் 23 : ஈரானின் அணு உலகைகள் மீது அமெரிக்கா தாக்குதல் (America Attack on Iran Power Plants) நடத்தியதற்கு ஈரான் கடும் கோபம் கொண்டுள்ள நிலையில், ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக்கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று (ஜூன் 22, 2025) ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், அதனை தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், ஈரானில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என டிரப்ம் பதிவிட்டுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா – உச்சக்கட்ட பதற்றம்
அணு ஆயுத உற்பத்தி விவகாரத்தில் ஈரான் தன் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் இஸ்ரேல் ஜூன் 13, 2025 அன்று ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளும் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் இரு நாடுகளிலும் கடுமையான சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஈரான் – இஸ்ரேல் இடையே நீடித்து வரும் இந்த மோதல் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டுள்ளது. அமெரிக்காவின் தலையீட்டால் தற்போது இது உலக பிரச்னையாக மாறி உள்ளது.
ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா
ஈரான் – இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்கா, தொடர்ந்து ஈரானுக்கு எதிராக கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தது. அந்த வகையில் நேற்று (ஜூன் 23, 2025) ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் அந்த அணு உலைகள் மொத்தமாக அழிக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியது. குறிப்பாக ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது அமெரிக்கா வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதில் அளித்த ஈரானின் உச்சபட்ச தலைவர் முகமது அலி காமெனி, அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் அழிவு காத்திருக்கிறது என்று கூறினார்.
ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வர கூடாது – டிரம்ப் பதிவு
Donald J. Trump Truth Social 06.22.25 04:55 PM EST pic.twitter.com/hYHasjv06Z
— Commentary Donald J. Trump Posts From Truth Social (@TrumpDailyPosts) June 22, 2025
இதனை தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சி மாற்றம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானதல்ல. ஆனால் தற்போதைய ஈரானிய ஆட்சியால், ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் வரக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.