யேமன் கடற்கரையில் இந்திய சரக்குக் கப்பல் மீது தாக்குதல்; 13 இந்தியர்கள் உள்பட 14 பேர் பத்திரமாக மீட்பு – இந்தியா கடும் கண்டனம்
வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யேமன் கடற்கரையோர செங்கடல் பகுதியில் இந்தியக் கொடியுடன் சென்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம், யேமன் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருவதாகவும், மீட்புப் பணியில் உதவிய யேமன் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.
ஆகஸ்ட் 5, 2026: யேமன் கடற்கரையோர செங்கடல் பகுதியில் இந்தியக் கொடியுடன் பயணித்த எம்.எஸ்.வி. பைஸ் நூரே ஒலியா என்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், கப்பல் கவிழ்ந்து கடலில் மூழ்கியது. இந்த தாக்குதலை இந்திய அரசு கடுமையாக கண்டித்துள்ளதுடன், கப்பலில் இருந்த 13 இந்தியர்கள் உள்பட 14 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்:
Indian MSV Faize Noore Oliya has been hit by a projectile near Yemeni waters, causing the vessel to capsize and sink.
India strongly condemns this unprovoked attack on the defenseless mechanised sailing vessel. The safety of our people is our supreme priority & I am relieved to…
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) August 4, 2026
தாக்குதல் நடைபெற்றபோது கப்பலில் 13 இந்திய கடலோடிகள் மற்றும் ஒரு யேமன் நாட்டவர் என மொத்தம் 14 பேர் இருந்தனர். யேமன் கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் இணைந்து மேற்கொண்ட மீட்புப் பணியில் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, யேமனின் மொகா துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யேமன் கடற்கரையோர செங்கடல் பகுதியில் இந்தியக் கொடியுடன் சென்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம், யேமன் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருவதாகவும், மீட்புப் பணியில் உதவிய யேமன் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.
தடையற்ற கப்பல் போக்குவரத்து விரைவில் மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டும்:
மேற்கு ஆசியாவில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ள இந்தியா, சர்வதேச சட்டங்களுக்கு இணங்க சர்வதேச கடல் வழித்தடங்களில் சுதந்திரமான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்து விரைவில் மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், இந்திய கடலோடிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மீட்கப்பட்ட பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும், சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளுடனும் இணைந்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கடல்சார் நிர்வாக இயக்குநரகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
பயங்கரவாத தாக்குதல் என கண்டித்த யேமன் அரசு:
இதற்கிடையில், சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசு இந்த தாக்குதலை ஹூதி தீவிரவாதத் தாக்குதல் என்று கண்டித்துள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட படகு மூலம் இந்தியக் கப்பல் குறிவைத்து தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள யேமன் அரசு, இது சர்வதேச சட்டம், கடல் பாதுகாப்பு மற்றும் சர்வதேச வர்த்தக சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, மீட்கப்பட்ட கப்பல் பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என்றும் யேமன் அரசு உறுதியளித்துள்ளது.
இந்த சம்பவம், செங்கடல் பகுதியில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன் கடந்த ஜூலை மாதம் கருங்கடலில் நடந்த தாக்குதலில் இந்திய கடலோடி ஒருவர் உயிரிழந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது. வணிகக் கப்பல்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள் உலகளாவிய வர்த்தகத்திற்கும் கடலோடிகளின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக இந்தியா மீண்டும் கவலை தெரிவித்துள்ளது.