Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியா–மலேசியா கூட்டுறவுக்கு புதிய வேகம்.. மலேசியா சென்ற பிரதமர் மோடி பாராட்டு..

இந்தியா–மலேசியா உறவு உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. நாம் கடல் அண்டை நாடுகள். பல நூற்றாண்டுகளாக இரு நாடுகளின் மக்களுக்கிடையே ஆழமான தொடர்புகள் நிலவி வருகின்றன. இன்று, உலகில் இந்திய வம்சாவளி மக்கள் அதிகம் வசிக்கும் இரண்டாவது பெரிய நாடாக மலேசியா உள்ளது. நமது நாகரிகங்கள் பகிர்ந்த கலாச்சார பாரம்பரியம் மற்றும் ஜனநாயக மதிப்புகளால் இணைக்கப்பட்டுள்ளன,” என பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா–மலேசியா கூட்டுறவுக்கு புதிய வேகம்.. மலேசியா சென்ற பிரதமர் மோடி பாராட்டு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 08 Feb 2026 11:29 AM IST

பிப்ரவை 8. 2026: மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில், இந்தியா–மலேசியா இடையேயான கூட்டுறவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். இரு நாடுகளுக்கும் இடையே “மிகவும் சிறப்பு வாய்ந்த” உறவு இருப்பதாகவும், மக்களுக்கிடையே “ஆழமான தொடர்புகள்” உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியின் இரண்டு நாள் மலேசியா பயணத்தின் போது இந்த கருத்துகள் வெளியிடப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடிக்கு பெர்தானா புத்ராவில் (Perdana Putra) பாரம்பரிய வரவேற்பும் மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது.

இந்தியா மலேசியா உறவு:

“இந்தியா–மலேசியா உறவு உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. நாம் கடல் அண்டை நாடுகள். பல நூற்றாண்டுகளாக இரு நாடுகளின் மக்களுக்கிடையே ஆழமான தொடர்புகள் நிலவி வருகின்றன. இன்று, உலகில் இந்திய வம்சாவளி மக்கள் அதிகம் வசிக்கும் இரண்டாவது பெரிய நாடாக மலேசியா உள்ளது. நமது நாகரிகங்கள் பகிர்ந்த கலாச்சார பாரம்பரியம் மற்றும் ஜனநாயக மதிப்புகளால் இணைக்கப்பட்டுள்ளன,” என பிரதமர் மோடி கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில், நியூ டெல்லி மற்றும் குவாலாலம்பூர் இடையேயான உறவுகள் “புதிய வேகத்தை” பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எரிசக்தி, உட்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு வலுப்பெற்றுள்ளதாகவும், டிஜிட்டல் பொருளாதாரம், உயிர்தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பரஸ்பர முதலீடுகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். சுற்றுலா மற்றும் மக்கள்-மக்கள் தொடர்புகளும் மேலும் ஆழமடைந்துள்ளதாக அவர் கூறினார்.

விரிவுபடுத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு:

“இந்த சாதனைகளிலிருந்து ஊக்கம் பெற்று, எங்கள் கூட்டுறவில் இதுவரை இல்லாத வேகத்தையும் ஆழத்தையும் கொண்டு வர முடிவு செய்துள்ளோம். பாதுகாப்புத் துறையில் தீவிரவாத எதிர்ப்பு, உளவுத் தகவல் பகிர்வு மற்றும் கடல் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம். பாதுகாப்பு ஒத்துழைப்பையும் மேலும் விரிவுபடுத்துவோம். செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் சேர்த்து, அரைகடத்தி (செமிகண்டக்டர்), சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறைகளிலும் எங்கள் கூட்டுறவை முன்னேற்றுவோம்.

இன்று நடைபெற்ற சிஇஓ மாநாடு வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளது. மூலோபாய நம்பிக்கையின் அடிப்படையில் பொருளாதார மாற்றத்திற்கான பாதையை அமைப்போம்,” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசான் (ASEAN) உச்சி மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை என்றும், ஆனால் “என் அன்புத் தோழருக்கு மிக விரைவில் மலேசியாவுக்கு வருவேன் என்று நான் வாக்குறுதி அளித்திருந்தேன். 2026 ஆம் ஆண்டில் எனது முதல் வெளிநாட்டு பயணமாக மலேசியாவிற்கு வந்துள்ளேன்,” என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

வேகமாக வளர்ந்து வரும் இந்தியா – மலேசியா பிரதமர்:

இந்தியாவுடன் உள்ள உறவுகளை பாராட்டிய மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், “இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இது சர்வதேச பொருளாதார வர்த்தக அரங்கில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். எனவே, ஆசான் அமைப்பின் சூழலில் இந்தியாவுடன் மேலும் பல ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்கினால், 2025 ஆம் ஆண்டில் எட்டிய 18.59 பில்லியன் டாலர் வர்த்தக அளவைத் தாண்டி பெரும் பயன் மலேசியாவிற்கு கிடைக்கும்,” என கூறினார்.

மேலும் படிக்க:

மேலும், “இயன்றவரை உள்ளூர் நாணயங்களை பயன்படுத்தும் முடிவு ஒரு முக்கிய சாதனையாகும். கல்வி மிக முக்கியமான துறையாகத் தொடர்கிறது. பல மலேசியர்கள் இந்தியாவில் கல்வி கற்றுள்ளனர்; அதேபோல் மலேசியாவில் கல்வி கற்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு தசாப்தமாக, என் நல்ல நண்பர் பிரதமர் மோடியின் தலைமையில், இந்திய கல்வி மையங்கள் உலகளவில் சிறப்பான அங்கீகாரம் பெற்றுள்ளன.

அவை மேற்கத்திய நாடுகளில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு இணையாகவும், சில நேரங்களில் அதைவிட மேம்பட்டதாகவும் திகழ்கின்றன. எனவே, இந்தியாவில் பல்வேறு துறைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நிச்சயமாக முயற்சிப்போம்,” என அவர் தெரிவித்தார்.