“முதல்வர் விஜய் வீட்டுக்கு முகத்தை மூடிக்கொண்டு வந்தது யார்?”.. விடாமல் துரத்தும் பிரேமலதா விஜயகாந்த்
இதனிடையே, அதிமுகவில் இருந்து பிரிந்து செல்லும் தரப்புக்கு சுமார் 6 அமைச்சர்கள் மற்றும் 10 வாரியத் தலைவர் பதவிகள் பேரமாகப் பேசப்பட்டுள்ளதாக அதிமுக தரப்பில் ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரனும் இது தொடர்பாக ஆளுநரைச் சந்தித்து, குதிரை பேரம் குறித்துப் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை, மே 15: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைந்த புதிய ஆட்சியில் ‘குதிரை பேரம்’ நடந்ததாக எழுந்துள்ள புகார்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாச்சலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த், சட்டப்பேரவையிலேயே முதலமைச்சர் விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். தொடர்ந்து, இவ்விவாகரத்தை தெளிவுப்படுத்தும் படியும் கேட்டுகொண்டார். ஆனால், தற்போது வரை அதுகுறித்து எந்த விளக்கமும் வரவில்லை. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து இன்று பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க: பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்.. “நிலைமையை உணராத இபிஎஸ்”.. எஸ்.பி.வேலுமணி பகிரங்கக் குற்றச்சாட்டு!!
முகத்தை மூடிக்கொண்டு வந்த மர்ம நபர் யார்?
தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், திரைமறைவில் அரசியல் பேரங்கள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது குறித்து பிரேமலதா விடுத்துள்ள அறிக்கையில், முதலமைச்சர் விஜய்யின் இல்லத்திற்கு அண்மையில் ஒரு நபர் காரில் முகத்தை மூடிக்கொண்டு வந்து சென்றதாக செய்திகள் வெளியாகின. அந்த நபர் யார் என்பதையும், அவர் எதற்காக வந்தார் என்பதையும் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரேமலதா அதில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
குதிரை பேரம் நடக்கவில்லை என நிரூபியுங்கள்:
மறைமுக அரசியல் அல்ல, வெளிப்படையான ஆதரவே மக்களின் நம்பிக்கை – 15.05.2026@CMOTamilnadu pic.twitter.com/pMuoCgbfmC
— Premallatha Vijayakant (@PremallathaDmdk) May 15, 2026
தமிழக அரசியலில் எவ்வித குதிரை பேரமும் நடைபெறவில்லை என்பதை முதல்வர் விஜய் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். திமுக கூட்டணியில் இருந்த இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எவ்வாறு நிபந்தனையற்ற ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்தார்களோ, அதேபோல மற்றவர்களும் செய்ய வேண்டும்.
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களின் நிலை:
அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து புதிய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், தங்களின் ஆதரவை எவ்வித நிபந்தனையுமின்றி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் எந்த குதிரைப் பேரமும் நடக்கவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தூய சக்தி பிம்பத்திற்குச் சோதனை:
இதனிடையே, அதிமுகவில் இருந்து பிரிந்து செல்லும் தரப்புக்கு சுமார் 6 அமைச்சர்கள் மற்றும் 10 வாரியத் தலைவர் பதவிகள் பேரமாகப் பேசப்பட்டுள்ளதாக அதிமுக தரப்பில் ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரனும் இது தொடர்பாக ஆளுநரைச் சந்தித்து, குதிரை பேரம் குறித்துப் புகார் தெரிவித்துள்ளார். தங்களை ஒரு ‘தூய சக்தி’ என்று முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழகம், தற்போது இதுபோன்ற திரைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதன் கோட்பாடுகளுக்கே எதிரானது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க: எரிபொருள் விலை உயர்வு.. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்.. லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!!
மக்களின் எதிர்பார்ப்பு:
முதலமைச்சர் இல்லமான நீலாங்கரையில் நடந்த சந்திப்புகள் மற்றும் ஆதரவு திரட்டும் முறைகள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் கடும் விவாதங்கள் கிளம்பியுள்ளன. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் இதுவரை வாய் திறக்காதது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. குதிரை பேரம் குறித்த புகார்களுக்குத் தவெக தரப்பு உரிய விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.