விளாத்திக்குளம் மாணவி பாலியல் கொலை… குற்றவாளிக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்.. 10 நாள்களுக்கு பிறகு உடலை வாங்கிய பெற்றோர்!
Vilathikulam Student Murder Case: தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் சடலத்தை 10 நாள்களுக்கு பிறகு பெற்றோர் பெற்றுக் கொண்டனர்.

விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி கொலை குற்றவாளிக்கு நீதிமன்ற காவல்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12- ஆம் வகுப்பு மாணவி அந்த பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை கைது செய்யக்கோரி அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர். இந்த சம்பவம் நடைபெற்று 9 நாட்களுக்குப் பிறகு ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்தனர். இந்த நிலையில், இன்று தர்ம முனிஸ்வரனை போலீசார் கொலை சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு அழைத்துச் சென்று, சம்பவத்தை செய்து காண்பிக்குமாறு கூறினர். அதன்படி, அவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதை நடித்து காண்பித்தார். இதனை போலீசார் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
குற்றவாளிக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்
இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறும், ஏப்ரல் 2-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்டார். இதனிடையே, பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெறாமல் இருந்து வந்தனர். குற்றவாளி கைது செய்யப்பட்ட பின்னரே, மாணவியின் உடலை பெறுவதாக தெரிவித்திருந்தனர். தற்போது, குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 10 நாட்களுக்குப் பிறகு மாணவியின் சடலத்தை அவரது பெற்றோர் பெற்றுக் கொண்டனர்.
மேலும் படிக்க: சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடல்.. 20க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்ததால் அதிர்ச்சி..
மாணவி பாலியல் கொலை சம்பவத்தின் பின்னணி
கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி சம்பந்தப்பட்ட மாணவி இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றிருந்தார். வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாதால், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சென்று பார்த்தபோது மாணவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள காற்றாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் குற்றவாளியின் உருவம் பதிவாகி இருந்தது.
டிஎன்ஏ பரிசோதனையில் சிக்கிய குற்றவாளி
அதன் அடிப்படையிலும், சிறுமியின் நகத்தில் இருந்து எடுக்கப்பட்ட சதை துணுக்கு மற்றும் சந்தேகத்தின் பேரில், சிலரிடம் எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளின் அடிப்படையில் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தர்ம முனீஸ்வரனின் டிஎன்ஏ மாதிரிகள் ஒத்து போனது. அதன் அடிப்படையில், போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் ஏற்கனவே 70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஆவார்.
மேலும் படிக்க: இன்க்யூபேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு.. பிறந்த 6 நாள் பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட கொடூரம்.. மருத்துவமனையின் அலட்சியம் தான் காரணமா?