கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி.. திமுக நிர்வாகி உள்பட இருவர் பலி.. கோயிலுக்கு சென்று திரும்பிய போது சோகம்!
Coimbatore Car And Lorry Accident: கோயம்புத்தூர் மாவட்டத்தில் கார் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தி்ல திராவிட முன்னேற்றக் கழத்தின் நிர்வாகி மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை கார் - லாரி மோதிய விபத்தில் இருவர் பலி
கோயம்புத்தூர் மாவட்டம், சூலுர் பகுதி பாப்பம்பட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைச் செயலாளராக இருந்து வந்தவர் கதிரேசன் ( 45 வயது). இவர், தனது நண்பரான வேல்முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேருடன் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு தரிசனம் மேற்கொள்வதற்காக காரில் சென்றிருந்தனர். கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு, அனைவரும் அதே காரில் ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, அன்னூர் பகுதியில் கதிரேசன் கார் வந்து கொண்டிருந்தது. அந்த சாலையில் தண்ணீர் லாரி ஒன்று எதிரே வந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லாரியின் முன் பகுதி மற்றும் கார் ஆகியவை அப்பளம் போல நொறுங்கின. மேலும், காரின் உள்ளே இருந்த கதிரேசன், வேல்முருகன் உள்ளிட்டோர் பலத்த காயமடைந்தனர்.
சாலை விபத்தில் திமுக நிர்வாகி உள்பட இருவர் பலி
உடனே, அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி அவர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கதிரேசன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படிக்க: சிலிண்டர் தட்டுப்பாடு.. விண்ணை முட்டும் உணவு பொருள்கள் விலை.. தொழிலாளர்கள் கடும் வேதனை!
மருத்துவமனையில் 9 பேருக்கு தீவிர சிகிச்சை
இதைத் தொடர்ந்து, அவர்களது சடலம் உடல் கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும், காரில் பயணித்த வேல்முருகன் குடும்பத்தினர் மற்றும் லாரியின் ஓட்டுனர் மற்றும் கிளீனர் ஆகியோர் பலத்த காயங்களுடன் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தண்ணீர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநரிடமும், அதன் உரிமையாளரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரும் சோகத்தை ஏற்படுத்திய விபத்து உயிரிழப்பு
லாரி- கார் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த நபர்கள் குறித்த விவரம் வெளியாகவில்லை. கோயம்புத்தூரில் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்கா சென்று விட்டு திரும்பிய போது கார் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவர்கள் குடும்பத்தினர் இடையே மட்டும் இன்றி அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ஆட்டோ LPG எரிவாயு தட்டுப்பாடு? இந்திய எண்ணெய் நிறுவனம் கொடுத்த விளக்கம்!!