AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாதயாத்திரை சென்ற முருக பக்தர்கள்.. கட்டுப்பாட்டை இழுந்து வந்த கார்.. அடுத்து நடந்த சோக சம்பவம்!

Virudhunagar Road Accident: விருதுநகர் மாவட்டத்தில் பாதயாத்திரையாக நடந்து சென்ற முருக பக்தர்கள் மீது கார் மோதியதில் இருவர் தூக்கி வீசப்பட்ட பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பந்தல்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதயாத்திரை சென்ற முருக பக்தர்கள்.. கட்டுப்பாட்டை இழுந்து வந்த கார்.. அடுத்து நடந்த சோக சம்பவம்!
விருதுநகரில் கார் மோதிய விபத்தில் 2 முருக பக்தர்கள் பலி
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 22 Feb 2026 11:34 AM IST

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள கழுவனைசேரியை சேர்ந்த முருக பக்தர்கள் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்ல முடிவு செய்தனர். அதன்படி, அவர்கள் விரதம் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 22) காரியாபட்டி பகுதியில் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புறப்பட்டனர். அவர்கள் அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டிகுறிச்சி விளக்கு அருகே இன்று காலை நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த சாலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து, திருச்செந்தூர் நோக்கி கார் ஒன்று சென்றது. அந்த காரானது திடீரென எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பாதயாத்திரையாக நடந்து சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில், கழுவனைசேரியைச் சேர்ந்த முத்து மகன் சடைய கருப்பன் ( 35 வயது), இதே பகுதியை சேர்ந்த முத்துராசு மகன் முத்துப்பாண்டி ( 35 வயது) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

அவசர ஊர்தி மூலம் இரு பக்தர்கள் அனுப்பி வைப்பு

உடனே, அந்த வழியாக சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்து கிடந்த சடைய கருப்பன் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோரை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் முதலுதவி அளித்துவிட்டு அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி, சடைய கருப்பன் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் படிக்க: திருப்பூரில் அதிரடியாக களமிறங்கிய டெல்லி போலீசார்.. 6 பேர் சுற்றி வளைத்து கைது.. பயங்கரவாத சதிச்செயலா?

தீவிர சிகிச்சை பிரிவில் அடுத்தடுத்து பிரிந்த உயிர்

அங்கு, அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி சடைய கருப்பன் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, இருவரது சடலங்களும் உடல்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

காரின் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை

மேலும், விபத்தை ஏற்படுத்திய காரை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தவுடன், இது குறித்த புகாரின் பேரில், காரின் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த சடைய கருப்பன் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகன், மகள்கள் உள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்ட முருக பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில், இருவர் உயிரிழந்தது அந்தப் பகுதி மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: பெண் காவல் ஆய்வாளரிடம் ரூ.5.42 கோடி சொத்து… தோண்டி துருவிய லஞ்ச ஒழிப்பு துறை… FIR- இல் அதிர்ச்சி தகவல்கள்!