பொதுமக்களுக்கு நிம்மதி செய்தி.. “ஏசி பேருந்துகள் வந்தாலும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தக் கூடாது”.. CM விஜய் உத்தரவு!
TN Bus Fare Hike: தமிழகத்தில் புதிதாக 2,000 குளிர்சாதன (AC) பேருந்துகளை உடனடியாக வாங்கி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதோடு, பயணிகளுக்குக் கூடுதல் சுமை தராமல் பேருந்துகள் மற்றும் டிக்கெட்டுகளில் விளம்பரங்கள் செய்வதன் மூலம் மாற்று வழிகளில் வருவாயைப் பெருக்க அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, ஜூலை 16: தமிழகத்தில் புதிய குளிர்சாதன பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தாலும், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் பேருந்து கட்டணத்தை எக்காரணம் கொண்டும் உயர்த்தக் கூடாது என்று முதலமைச்சர் விஜய் போக்குவரத்துத் துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கட்டணத்தை உயர்த்தாமல் மாற்று வழிகளில் வருவாயைப் பெருக்க வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். முக்கியமாக, தமிழகத்தில் புதிதாக 2,000 குளிர்சாதன பேருந்துகளை உடனடியாக வாங்கி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: லஞ்சப் புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. 14 நாட்கள் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு!!
2,000 புதிய ஏசி பேருந்துகள் வாங்க உத்தரவு:
தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த தொடர் ஆய்வுக்கூட்டங்களை முதலமைச்சர் விஜய் நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற போக்குவரத்துத் துறை ஆய்வுக்கூட்டத்தில், பொதுமக்களின் வசதிக்காகத் தங்குதடையற்ற சிறப்பான சேவையை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, தமிழகப் போக்குவரத்துத் துறையில் உடனடியாக 2,000 புதிய குளிர்சாதன பேருந்துகளை வாங்கி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அதிரடி அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
கட்டண உயர்வுக்குத் தடை – மாற்று வழியில் வருவாய்:
புதிய நவீன பேருந்துகள் மற்றும் ஏசி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டால் வழக்கமாகப் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுவது வழக்கம். ஆனால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
“புதிதாகக் குளிர்சாதன பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தாலும் கூட, ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பேருந்து டிக்கெட் கட்டணத்தை எக்காரணம் கொண்டும் உயர்த்தக் கூடாது” என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், மாற்று வழிகளில் போக்குவரத்துத் துறையின் வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
விளம்பரங்கள் மூலம் வருவாயை ஈட்ட திட்டம்:
முதலமைச்சரின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, பயணிகளுக்குக் கூடுதல் கட்டணச் சுமையை ஏற்படுத்தாமல் துறையின் நஷ்டத்தைக் குறைத்து வருவாயைப் பெருக்குவதற்குப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் புதிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: பழனி நில மோசடி விவகாரம்.. யார் அந்த பவர் சென்டர்?.. CBI விசாரணை கோரி முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் சரமாரி கேள்வி..
அதன்படி, பேருந்து பயணச் சீட்டுகளின் பின்புறம் விளம்பரங்கள் அச்சிடுவது மற்றும் அரசுப் பேருந்துகளின் உள் மற்றும் வெளிப் பகுதிகளில் வணிக ரீதியிலான விளம்பரங்களை அனுமதிப்பது போன்ற மாற்று வழிகள் மூலம் வருவாயை ஈட்ட அதிகாரிகள் தற்போது தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றனர். தவெக அரசின் இந்த மக்கள் நலன் சார்ந்த முடிவு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.