‘SIR பணிகளில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை’.. அடித்துச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி!!
Special Intensive Revision (SIR): வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் வழக்கு தொடர்ந்துள்ளது. SIR என்றாலே திமுக அலறுவது ஏன் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, SIR பணிகளை மேற்கொள்ள ஒரு மாத காலம் போதும் என்றும் கூறியுள்ளார்.
கோவை, நவம்பர் 10: தமிழகத்தில் SIR பணிகள் மேற்கொள்ள வேண்டியது முக்கியம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை நீக்க SIR பணிகள் அவசியம் என்று கூறிய அவர், இந்த பணிகளில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள ஒரு மாதத்துக்குள் (டிச.4க்குள்) எப்படி 6.34 கோடி வாக்காளர்கள் விவரங்களை நேரில் சென்று சரி பார்க்க முடியும்? என்று கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக காலதாமதாமாக வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்.
Also read: தமிழகத்தில் இருந்து இன்று முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது.. பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
படிவம் வழங்க 8 நாட்கள் போதும்:
இதுகுறித்து கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வாக்காளர் சிறப்பு திருத்தம் இதற்கு முன்பு 8 முறை நடந்துள்ளது. முறைகேடாக இருக்கும் வாக்காளர்களை விடுவித்து தகுதியானவர்கள் இடம்பெற வேண்டும் என்பதே SIR-ன் நோக்கம் என்று கூறியுள்ளார். அதோடு, SIR என்றாலே திமுக அலறுகிறது, பதறுகிறது. SIR மேற்கொள்ள கால அவகாசம் போதாது என கூறுகின்றனர். ஆனால், தேர்தல் ஆணையத்தின் திட்டப்படி, ஒரு மாதம் காலம் இருக்கிறது. 300 வீடுகள் இருக்கும் ஒரு பாகத்தில் வாக்காளர் படிவம் கொடுக்க 8 நாட்கள் போதும் என்றும் அவர் கூறியுள்ளார்.




SIRக்கு ஆதரவாக அதிமுக வழக்கு:
திமுகவும், கூட்டணிக் கட்சிகளும் SIR-ஐ எதிர்க்கும் நோக்கம் திருட்டு வாக்குகளுக்காகத்தான். வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்தியை மக்களுக்கு கூற ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். SIR வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். உயிரிழந்த ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ளது என்றும் கூறினார். அதோடு, SIR விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்தது உண்மைதான். திமுக தவறான தகவல்களை தெரிவிப்பதாலேயே SIR விவகாரத்தில் வழக்கு போட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Also read: வாக்காளர் கணக்கீட்டு படிவம்: ஆன்லைனிலும் நிரப்பலாம்.. எப்படி தெரியுமா?
கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும்:
மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என்று கூறியுள்ளார். அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் என்றும், முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் எனவும் அமித்ஷாவே அறிவித்துவிட்டார் என்றும் கூறினார். மேலும், அதிமுகவை விமர்சிக்காமல் பாஜகவை ஏன் முதல்வர் ஸ்டாலின் விமர்சிக்கிறார்? என்று கேள்வி எழுப்பிய அவர், அதிமுகவை விமர்சிக்க முடியாததால் பாஜகவை விமர்சிப்பதாகவும் தெரிவித்தார்.