Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா.. டெண்டர் கோரிய அரசு..

Guindy Green Park: சென்னை கிண்டியில் இருக்கும் ரேஸ்கோர்ஸ் நிலத்தை அரசு கையகப்படுத்தி சீல் வைக்கப்பட்ட நிலையில், அங்கு 118 ஏக்கர் பரப்பளவில் பசுமை பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுளது. மேலும், விரிவான திட்ட அறிக்கை மற்றும் வடிவமைப்பை தயார் செய்வதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.

கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா.. டெண்டர் கோரிய அரசு..
கிண்டி ரேஸ் கிளப்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Jun 2025 07:11 AM

சென்னை கிண்டியில் இருக்கக்கூடிய ரேஸ் கிளப் நிலத்துக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கி செலுத்தாதன் காரணமாக தமிழக அரசு அந்த நிலத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கிண்டியில் இருக்கக்கூடிய ரேஸ் கோர்ஸ், பசுமை பூங்காவாக மாற்றுவதற்காக விரிவான திட்ட அறிக்கை, வடிவமைப்பு தயார் செய்ய தமிழ்நாடு அரசு தற்போது டெண்டர் கோரியுள்ளது. சென்னையில் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக இருப்பது கிண்டி ரேஸ் கோர்ஸ். 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடமானது ஆங்கிலேயர் காலத்தில் குதிரை பந்தயத்திற்காக பயன்படுத்தப்பட்டது. அதற்காக 1945 ஆம் ஆண்டு சுமார் 99 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் கொடுக்கப்பட்டது. இந்த குத்தகை காலம் என்பது 2044 ஆம் ஆண்டு முடிவடைகிறது.

கிண்டி ரேஸ் கோர்ஸிற்கு சீல் வைத்த அரசு:

ஆனால் கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்திற்கான வாடகை பாக்கியை 1970 ஆம் ஆண்டில் இருந்து ரேஸ்கோர்ஸ் நிர்வாகம் செலுத்தவில்லை என தெரிய வந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து ரேஸ்கோர்ஸ் நிர்வாகம் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வாடகை உயர்த்த அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதாகவும், ஒரு மாத காலத்திற்குள் வாடகை பாக்கியத்தை செலுத்தவில்லை என்றால் அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டிருந்தது. அந்த வகையில் ரூ. 730 கோடியே 86 லட்சத்தை செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டு இருந்தது. இதன் அடிப்படையில் தமிழக அரசு ரேஸ்கோர்ஸிற்கு விடப்பட்ட குத்தகையை ரத்து செய்து சீல் வைக்கப்பட்டது.

அரசு கையகப்படுத்திய இந்த நிலத்தை பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்தலாம் என நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் முன்னதாக கிண்டி ரேஸ் கோர்ஸ் மிகப் பெரிய நீர் நிலைகளை உருவாக்க வேண்டும் அதன் மூலம் பருவ மழை காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு பேரிடர்களிஒல் இருந்து தவிர்க்கலாம் என பலதரப்பு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

பசுமை பூங்கா அமைக்க பரிந்துரை:

அதேபோல் கிண்டி அருகில் இருக்கக்கூடிய வேளச்சேரி பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ள பாதிப்பை தடுப்பது, கழிவு நீர் கலப்பது, குப்பைகள் கொட்டப்படுவது என பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்த நிலம் அமைக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை பசுமை பூங்காவாக மாற்றலாம் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.

பசுமை பூங்கா அமைக்க டெண்டர்:

இந்த பரிந்துரையின் அடிப்படையில் தற்போது தமிழக அரசு கிண்டி ரேஸ் கோர்ஸை பசுமை பூங்காவாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும். அதற்கான டெண்டரை கோரியுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை மற்றும் வடிவமைப்பை தயார் செய்வதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது. 118 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கும் இந்த பூங்காவில் மலர் படுக்கைகள், தோட்டங்கள், கண்ணாடி மாளிகை, வண்ணத்துப்பூச்சி தோட்டம் என 25 வகையான வசதிகளுடன் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூபாய் 4,832 கோடி மதிப்பில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான டெண்டரை கோரியுள்ளது. ஏற்கனவே சென்னை மாநகரில் செம்மொழிப் பூங்கா கலைஞர் நூற்றாண்டு பூங்கா என இரண்டு பூங்காக்கள் மிகப்பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், அதனை தொடர்ந்து கிண்டியில் அமைய இருக்கும் இந்த பசுமை பூங்காவும் மக்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.