தருமபுரி அருகே பாஜக – விசிகவினர் கடும் மோதல் – இரு தரப்பும் கட்டைகளால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு
BJP VCK Clash : தருமபுரி மாவட்டம் அரூரில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீது விமர்சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் அதனை எதிர்த்து விசிகவினர் அந்தப் பகுதியில் கூடிய நிலையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

பாஜக - விசிக இடையே மோதல்
தருமபுரி, பிப்ரவரி 19 : தருமபுரி மாவட்டம் அரூரில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் (Thol.Thirumavalavan) மீது விமர்சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் அதனை எதிர்த்து விசிகவினர் அந்தப் பகுதியில் கூடிய நிலையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம் அரூரில் பாஜகவின் பட்டியல் பிரிவு சார்பில் மத்திய அரசு வழங்கி வரும் நிதியை தமிழக அரசு உரிய முறையில் பயன்படுத்தவில்லை என்று கூறி பிப்ரவரி 19, 2026 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் சரவணன், அமமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆர்.ஆர்.மருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகளான அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சியை சேர்ந்தோரும் பங்கேற்றனர்.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக மாவட்ட தலைவர் சரவணன், மத்திய அரசின் நிதிகளை தமிழ்நாடு அரசு முறையாக பயன்படுத்தவில்லை என்றும், திமுகவுடன் கூட்டணியில் இருந்த தொல்.திருமாவளவன் அதனை கண்டிக்கவில்லை என்றும் பேசினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த அரூர் வடக்கு ஒன்றிய விசிக செயலாளர் மூவேந்தன் தலைமையில் அந்த கட்சியினர் திரண்டு, திருமாவளவன் குறித்து பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையும் படிக்க : “நிறைவேறிய விஜயகாந்த் விருப்பம்”..நெகிழ்ந்த பிரேமலதா.. பெரு மகிழ்ச்சி தெரிவித்த ஸ்டாலின்..
இதனால் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அவர்களை முன்னாள் எம்எல்ஏ முருகன் சமாதானம் செய்ய முயன்றும் அவர்கள் அமைதியடையவில்லை. இந்த தகராறு பெரிய அளவில் வளர்ந்து ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
இரு தரப்பினரும் கட்டைகள் இரு கட்சி கொடிகளால் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதில் பாஜகவை சேர்ந்த ஒருவருக்கும் காவல்துறையை சேர்ந்த போலீசார் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டு இரு தரப்பினரையும் விலக்கி பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தகராறு தொடர்பாக பாஜக மற்றும் விசிகவினர் அரூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : அரசு பேருந்தில் இலவச பயணம் செய்த பெண்கள் குறித்து விமர்சனம்… ஓட்டுநர்-நடத்துநர் மீது பாய்ந்த நடவடிக்கை!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இனி வரும் காலங்களில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் இதுபோன்ற மோதல்கள் அடிக்கடி நிகழ வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கின்றனர்.