அரசு பேருந்தில் இலவச பயணம் செய்த பெண்கள் குறித்து விமர்சனம்… ஓட்டுநர்-நடத்துநர் மீது பாய்ந்த நடவடிக்கை!
Govt Bus Driver-Conductor Suspended : திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் விடியல் பயணம் திட்டத்தில் பயணித்த பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் விளக்கம் கேட்டு உத்தரவிடப்பட்டுள்ளது .
தமிழகத்தில் அரசு சார்பில் நகரப் பேருந்துகளில் மகளிர் விடியல் பேருந்து பயணம் என்ற இலவச திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தினந்தோறும் ஏராளமான பெண்கள் இலவசமாக நகர பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பூரில் இருந்து காங்கேயத்துக்கு அரசு பேருந்து வந்து புறப்பட்டு சென்றது. அந்த பேருந்தில் காங்கேயம் விடுதி நிறுத்தம் பேருந்து நிலையத்தில் சில பெண்கள் ஏறினார். அவர்கள், நடத்துனரிடம் மெடிக்கல் ஸ்டாப்பிற்கு டிக்கெட்டுகள் கேட்டுள்ளனர். அப்போது, அந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் 2 நிறுத்தங்கள் தானே உள்ளது. உங்களால் நடந்து செல்ல முடியாதா என அந்த பெண்களைப் பார்த்து கேள்வி எழுப்பியதுடன், டிக்கெட் கொடுக்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது. மேலும், இந்த பேருந்து பஸ் நிலையத்துக்கு செல்வதாகவும், டிக்கெட் பரிசோதகரிடம் உங்களை ஒப்படைத்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர்.
பெண்கள் குறித்து தரக்குறைவாக பேச்சு
மேலும், அவர்களிடம் நீங்கள் ரூ.500 அபராதம் கட்டினால் தான் திருந்துவீர்கள் என கூறியதுடன், பேருந்து நிலையத்தில் அந்த பெண்களை இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பெண்களுக்கும் நடத்துனருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கிருந்த போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களை சமாதானம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
மேலும் படிக்க: சென்னையில் அமைகிறது மிகப்பெரிய ஏஐ டேட்டா சென்டர் – இதனால் என்ன பலன்?




அரசு போக்குவரத்து கழக அதிகாரி விசாரணை
இதனால், நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த பெண்களுக்கு டிக்கெட் வழங்காமலும், அவர்களை தரக்குறைவாக பேசிய அரசுப் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பூர் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ஓட்டுநர்-நடத்துநர் மீது நடவடிக்கை
இதில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மேற்கண்ட செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து கழக அதிகாரி உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டு இருந்தும் பெண்களுக்கு டிக்கெட் கொடுக்காமல் அவர்களை தரக்குறைவாக பேசிய அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 4 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. வானிலை நிலவரம்!!