Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு.. நாளை முதல் வறண்ட வானிலை தான்..

Tamil Nadu Weather Update: நாளை முதல் தமிழகத்தில் மீண்டும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, டிசம்பர் 18, 2025 தேதியன்று ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பதிவாகக்கூடும். எனினும், தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு.. நாளை முதல் வறண்ட வானிலை தான்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Dec 2025 07:00 AM IST

வானிலை நிலவரம், டிசம்பர் 17, 2025: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்தாலும், அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளில் பனிமூட்டம் காணப்பட்டது. இந்தச் சூழலில், டிசம்பர் 16, 2025 தேதியான நேற்றிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பதிவாகி வருகிறது. அடர்ந்த மேகக் கூட்டங்களின் காரணமாக ஈரப்பதம் அதிகரித்து, இந்த மழை பதிவாகி வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு:


இந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. சென்னையில் இன்று நடக்கும் பாஜக உயர்மட்ட குழு கூட்டம்..

டிசம்பர் 16, 2025 தேதியான நேற்று காலை, சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை தொடர்ந்து பதிவானது. நீண்ட நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த சூழலில், இந்த மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வானிலை எப்படி இருக்கும்?

இதனைத் தொடர்ந்து, நாளை முதல் தமிழகத்தில் மீண்டும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, டிசம்பர் 18, 2025 தேதியன்று ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பதிவாகக்கூடும். எனினும், தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இந்த நிலைமை டிசம்பர் 22, 2025 தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பதிவாகக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.