Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

யாரும் கூமாப்பட்டி போகாதீங்க.. முடிவுக்கு வந்த ட்ரெண்டிங்.. என்ன காரணம்?

சமூக வலைத்தளங்களில் வைரலான கூமாப்பட்டி கிராமம், அதன் அழகிய இயற்கை எழில் காரணமாக சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது. இதனால், பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதிக்கு மக்கள் செல்ல தடை உள்ளதாகவும், அணைப்பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாரும் கூமாப்பட்டி போகாதீங்க.. முடிவுக்கு வந்த ட்ரெண்டிங்.. என்ன காரணம்?
கூமாப்பட்டி கிராமம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 26 Jun 2025 13:40 PM

சமூக வலைத்தளங்கள் வளர்ச்சி என்பது சிறிய விஷயம் என்றாலும் உலகின் கடைக்கோடி வரை செல்லக்கூடிய அளவுக்கு கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. அப்படியாக கடந்த 2,3 நாட்களாக இணையத்தில் ஒரு ஊர் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. கொடைக்கானல், ஊட்டி, காஷ்மீர், மூணார், குன்னூர் என இந்தியாவின் அத்தனை சுற்றுலா தலங்களும் இந்த இடத்தைக் கண்டால் தோற்றுப் போய்விடும் என சொல்லும் அளவுக்கு அந்த ஊர் புகழப்பட்டது. அதுமட்டுமல்லாமல் காதல் தோல்வியா, குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடணுமா?, இயற்கையுடன் இணைந்து வாழணுமா?, பூமியிலே சொர்க்கத்தைப் பார்க்கணுமா? என்றெல்லாம் பல வித கேள்விகளுடன் dark_night_tn84 என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து விதவிதமான வீடியோக்களும் வந்த வண்ணம் இருந்தது. அந்த ஊர் தான் கூமாப்பட்டி.

கூமாப்பட்டியில் என்ன ஸ்பெஷல்?

 

View this post on Instagram

 

A post shared by JP. gold (@dark_night_tn84)


இந்த கூமாப்பட்டி ஊரானது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திரா குடியிருப்பு ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த கூமாபட்டி கிராமம் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக பார்ப்பதற்கே கண்களைக் கவரும் வகையில் அமைந்தது. இந்த நிலையில் கூமாப்பட்டிக்கு அருகே தான் விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாய மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் பிளவாக்கல் அணையானது உள்ளது.

இந்த அணையின் நீரில் குளித்தவாறு இளைஞர் ஒருவர் கூமாப்பட்டியின் பெருமைகளை பேசி வீடியோவாக வெளியிட்டு வந்தார். பல மாதங்களாக அவர் வீடியோ வெளியிட்ட நிலையில் கடந்த சில நாட்களாக அவை ட்ரெண்டாக தொடங்கியது. அதில் கூமாப்பட்டியை விதவிதமாக வீடியோ எடுத்து பதிவிட இயற்கை எழில் கொஞ்சும் அந்த இடத்தை கண்டு அனைவரும் சற்றே அதிசயித்துதான் போயினர்.

விருதுநகர் என்றாலே வெயில், கந்தக பூமி, வறட்சி மாவட்டம் என பல பெயர்களைக் கொண்டிருக்கும் நிலையில் அந்த ஊரில் இப்படி ஒரு இடம் இருக்கிறதா என ஆச்சரியம் ஏற்பட்டது.

கூமாபட்டிக்கு படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்

ஏற்கனவே தென்னிந்தியாவின் ஸ்பா என அழைக்கப்படும் குற்றாலத்தில் சீசன் தொடங்கி இருக்கும் நிலையில் அங்கு இந்தியா முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வர தொடங்கியுள்ளனர். அதேசமயம் அங்கு தொடர்ச்சியாக கன மழை பெய்தால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் எப்போது குளிக்க தடைவிதிப்பார்கள் என்ன கணிக்க முடியாத அளவுக்கு சூழல் உள்ளதால் சில நேரங்களில் சுற்றுலா பயணிகள் சற்று ஏமாற்றத்துடன் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கூமாப்பட்டி தொடர்பான வீடியோ வைரலான நிலையில் பலரும் அந்த ஊரை தேடி செல்ல தொடங்கியுள்ளனர். இணையத்தில் கூமாப்பட்டி எங்கு உள்ளது என அதிகம் தேடிய பலரும் கூகுள் மேப்பில் அதற்கான வழி கேட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பச்சை பசேலன வயல்வெளிகள் நிறைந்திருக்கும் அந்த கிராமத்தை நோக்கி ரியல் எஸ்டேட் காரர்களும் படையெடுக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

பொதுப்பணித்துறை விடுத்த எச்சரிக்கை

இந்த நிலையில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை விடுத்த எச்சரிக்கையில் இணையதள ரீல்ஸ்களில் காணப்படும் கூமாப்பட்டியின் பசுமை நிறைந்த பகுதிகள் அனைத்தும் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பவை என்றும், கொரோனா காலத்தில் இந்த இடங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது வரை அது அமலில் உள்ளதால் யாரும் இங்கு வீடியோக்களை நம்பி  படையெடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

அதேசமயம் அணைப்பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட நபர் அந்த தடையை மீறினாரா எனவும் விசாரணை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.