பாஜக மேலிடம் அழைப்பு.. திடீர் டெல்லி விசிட்.. காரணத்தை சொன்ன தமிழிசை சௌந்தரராஜன்!

Tamilisai Soundararajan Delhi Visit : பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திடீரென 2025 ஜூன் 28ஆம் தேதியான இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் அழைப்பின் பேரின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக மேலிடம் அழைப்பு.. திடீர் டெல்லி விசிட்.. காரணத்தை சொன்ன தமிழிசை சௌந்தரராஜன்!

தமிழிசை சௌந்தரராஜன்

Updated On: 

28 Jun 2025 14:47 PM

சென்னை, ஜூன் 28 : பாஜக மேலிடத்தின் அழைப்பின் பேரில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan) 2025 ஜூன் 28ஆம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழிசை சௌந்தரராஜனின் திடீர் டெல்லி பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பாஜகவில் புதிய பொறுப்புகள் வழங்கப்படுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜேபி (JP Nadda) நட்டாவின் அழைப்பின்பேரில், டெல்லிக்கு செல்வதாக அவரே விளக்கம் கொடுத்திருக்கிறார். இது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும 10 மாதங்களில் நடைபெற உள்ளதால், தற்போதே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதனால், அனைத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதில், ஆளும் திமுகவை வீழ்த்த வேண்டும் என அதிமுக பாஜக கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. அண்மையில், தான் பாஜக அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்தது.

தமிழிசை சௌந்தரராஜன் டெல்லி பயணம்

இதனை அடுத்து, பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரனை நியமித்தது. தென் மாவட்டங்களில் தனது வாக்கு வங்கியை பலப்படுத்த இந்த நடவடிக்கை பாஜக மேலிடம் எடுத்துள்ளது. இப்படியாக பாஜகவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.

இந்த சூழலில், தமிழக பாஜகவில் முக்கிய முகமாக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் 2025 ஜூன் 28ஆம் தேதியான இன்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்புகிறது.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்ததராஜன் பேட்டி அளித்தார். அவர் பேசுகையில், ”பாஜக தேசிய தலைவர் நட்டாவின் அழைப்பு காரணமாக டெல்லி செல்கிறேன். ஜூலை 1ஆம் தேதியன்று பாஜகவின் அந்தமான் நிக்கோபார் தீவின் மாநில தலைவர் தேர்வு நடக்கவுள்ளது. அதற்காக அழைக்கப்பட்டிருக்கிறேன் என்று கருதுகிறேன்” என விளக்கம் அளித்தார்.

தமிழிசை பேட்டி

தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை சந்திக்காமல், திமுக நிர்வாகிகளை மட்டும் சந்தித்து வருகிறார். திமுகவினருக்கு பதிலாக போராடி வரும் மருத்துவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டதில் இருந்து, ஆளுங்கட்சியான திமுகவுக்கு பயத்தை அளித்திருக்கிறது. ஏற்கனவே மத்திய அமைச்சர் அமித்ஷா தெளிவான பேட்டி கொடுத்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாகவும், ஒற்றுமையாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் பெரியார் விலை போக மாட்டார் என்பதால், லோக்சபா தேர்தலின் போது கனிமொழி பெரியார் புகைப்படத்தை நீக்கினார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் விளம்பரம் மட்டுமே செய்து வருகிறார்கள்.

சுகாதாரத்துறை அமைச்சரே தமிழ்நாட்டில் மருத்துவரை தேடும் நிலை உள்ளது. அமைச்சர்களின் செயல்பாடுகள் மோசமாக இருக்கிறது. தமிழ்நாடு போதைப்பொருளின் தலைநகரமாக உள்ளதாக அமித்ஷாவே விமர்சித்துள்ளார்” என தெரிவித்தார்.