தீவிரமாகும் பருவழை.. அடுத்த 4 நாட்களுக்கு வெளுக்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்?
Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். அதாவது, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, ஜூலை 31 : தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு டெல்டா (Tamil Nadu Delta Districts) மாவட்டங்களில் கனமழை (Tamil Nadu Weather) பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது வரை, தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மட்டும் மழை பெய்து வந்த நிலையில், இனி வரும் நாட்களில் டெல்டா மாவட்டங்களிலும் மழை வெளுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. ஆனால், மற்ற மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பொழிவு என்பதே இல்லை. சென்னையிலும் கூட அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், கடந்த மூன்று தினங்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மேற்கு திசை வேகமாறுபாடு காரணமாக, 2025 ஜூலை 31ஆம் தேதியான இன்று முதல் 2025 ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025 ஆகஸ்ட் 2ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 3ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.




Also Read : தமிழகத்தில் தொடரும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
அடுத்த 4 நாட்களுக்கு வெளுக்கும் கனமழை
https://t.co/jW8fHWgFaz pic.twitter.com/S5KbSXiJGT
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) July 30, 2025
2025 ஆகஸ்ட் 4ஆம் தேதி தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 2025 ஆகஸ்ட் 5ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், சிவகங்கை, ராமாநாபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தென்தமிழகம், வடதமிழகம், கடலோர மாவட்டங்களில் அசௌகரியும் ஏற்படலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read : தமிழ்நாட்டில் இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்!
சென்னையை பொறுத்தவரை, 2025 ஜூலை 31ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் னவும், நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.