Tamil Nadu News Updates: சென்னையில் கைதான தூய்மை பணியாளர்கள் விடுவிடுப்பு!
Tamil Nadu Breaking News Today 14 August 2025, Live Updates: சென்னை மாநகராட்சியை கண்டித்து 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்கள் ஆயிரம் பேர் நேற்று நள்ளிரவில் திடீரென கைது செய்யப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை போராட்டம்
Breaking in Tamil Today 14 August 2025 Updates: தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் ஆகஸ்ட் 14, 2025 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில் புதிதாக தொழில் துவங்கவுள்ள நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த பகுதியில் தெரிந்துகொள்ளலாம். வடமேற்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 19, 2025 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை குறித்த தகவல்களை இந்த பகுதியில் தெரிந்துகொள்ளலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நடிப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகவுள்ள நிலையில் அந்தப் படம் குறித்த விமர்சனங்கள், மற்றும் செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம். மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் குறித்த தகவல்களும் இந்தப் பகுதியில் உடனுக்குடன் வெளியாகும்.
LIVE NEWS & UPDATES
-
காலை 11 மணி முதல் மாலை 3.10 மணி வரை
மூன்று நாட்களும் காலை 11 மணி முதல் மாலை 3.10 மணி வரை பொன்னேரி – கவரப்பேட்டை வழித்தடத்தில் பராமரிப்புகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
பொன்னேரி கவரப்பேட்டை இடையே ரத்து
ஆகஸ்ட் 14,16ஆம் தேதி மற்றும் 17ஆம் தேதி வரை பொன்னேரி கவரப்பேட்டை இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
சென்னை : மின்சார ரயில்கள் மூன்று நாட்களுக்கு ரத்து
சென்னையில் பொன்னேர் கவரப்பேட்டை வழித்தடத்தில் மின்சார ரயில்கள் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக, மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முதல்வர்
ஏழைகள், விளிம்பு நிலையில் இருப்போருக்கு எதிராக கல்வி, சமூக பாகுபாடு இருக்கிறது என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, ஆளுநரின் ரவியின் விமர்சனத்தை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளார்.
-
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – ஆளுநர் குற்றச்சாட்டு
இது தொடர்பான சுதந்திர தின அறிக்கையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் 33 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
திமுகவை சாடிய ஆளுநர் ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தனது சுதந்திரதின வாழ்த்து குறிப்பில், திமுக அரசை அவர் கடுமையாக சாடியுள்ளார். ஏழைகளுக்கு எதிராக சமூகப் பாகுபாடு உள்ளதாகவும், இளைஞர்களிடம் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்
-
மலையாள நடிகை மினு முனீரை கைது செய்த சென்னை போலீசார்.. என்ன காரணம்?
10 வருடங்களுக்கு முன்பு உறவினரின் 14 வயது மகளை நடிப்பதற்காக மலையாள நடிகை மினு முனீர் சென்னை அழைத்து வந்ததாகவும், 4 பேர் அந்த சிறுமியிடம் அத்துமீறியதாகவும் சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் நடிகையை கேரளாவில் கைது செய்த திருமங்கலம் மகளிர் போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
-
17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை!
தூத்துக்குடி மாவட்டத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.1.75 லட்சம் அபராதம்… ராமேஸ்வர மீனவர்கள் 8 பேர் விடுதலை
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை தலா ரூ.1.75 லட்சம் அபராத தொகையுடன் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராத தொகையை கட்ட தவறினால் 6 மாதங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
-
கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் விடுவிப்பு!
சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டனர். கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். 12 மண்டபங்களில் அடைக்கப்பட்டிருந்த 922 தூய்மைப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் விரைவில் படகு ஆம்புலன்ஸ் சேவை..!
தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்புகளின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள கர்ப்பிணிகள், நோயாளிகளை மீட்டு உரிய சிகிச்சையளிக்கும் வகையில் படகு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட உள்ளது. 5 படகு ஆம்புலன்ஸ் வாங்க திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.
-
சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருப்புமுனையாக இருக்கும் – ராமதாஸ்!
என்னுடைய தலைமையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருப்புமுனையாக இருக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் என்னைப் பற்றி அவதூறாக பேசினாலும் என் பயணம் நிற்காது என அவர் கூறியுள்ளார்.
-
எம்.பி.க்களுக்கு தனிப்பட்ட அலுவலகம் – செல்வபெருந்தகை கோரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள சில எம்.பி.க்களுக்கு இதுவரை தனிப்பட்ட அலுவலகம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு அலுவலகம் ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை கூறியுள்ளார்.
-
புதிய டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கு.. நீதிபதிகள் புதிய உத்தரவு
புதிய டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முடித்து வைத்துள்ளது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி புதிய டிஜிபி பணி நியமனம் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு!
தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இப்படியான நிலையில் செங்கல்பட்டு புக்கத்துறை பகுதியில் படாளம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வாகன நெரிசல் ஏற்படும் என்பதால் மாற்று வழிகளை பயன்படுத்தி செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைக்கும் பணி.. உதயநிதி தொடங்கி வைத்தார்!
சென்னை சிவானந்தா சாலை பகுதியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைக்கும் பணியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.31 கோடி திட்டம் மூலம் மழைக்காலங்களில் வெள்ள நீர் விரைவாக கடலில் கலக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உங்களுக்காக நிற்கும் அரசு.. தூய்மைப் பணியாளர்கள் பற்றி முதலமைச்சர் பதிவு
நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு எனவும் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவு
🧹 நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது #DravidianModel அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான… pic.twitter.com/PEpSAiqZzq
— M.K.Stalin (@mkstalin) August 14, 2025
-
அதிமுக ஒற்றுமை பற்றி பேசினால் அவமரியாதை.. ஓபிஎஸ் குற்றச்சாட்டு!
அதிமுக ஒற்றுமையை பற்றி பேசுபவர்கள் குறிவைத்து அவமரியாதை செய்யப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். தலைமை பதவிக்கான அறிகுறி இல்லாததால் தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர் தோல்விகளை சந்திப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
-
தூய்மை பணியாளர்கள் கைது கண்டனத்திற்குரியது – சண்முகம்
தூய்மை பணியாளர்கள் கைது கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் இன்று மாலை சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.
-
சுதந்திர தின விடுமுறை.. சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிறு அட்டவணைப்படி சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
சின்னமன்னூரில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 60 சவரன் நகை திருட்டு!
தேனி மாவட்டம் சின்னமன்னூரில் ஓடைப்பட்டி பேரூராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் புனிதா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பணியின்போது மரணம்.. தூய்மை பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு
பணியின்போது மரணமடையும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். மேலும் சுயதொழில் தொடங்க விரும்பும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தூய்மை பணியாளர்களுக்கு காலை இலவச உணவு வழங்கப்படும்!
நகர்புற உள்ளாட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். முதற்கட்டமாக சென்னையில் இந்த திட்டம் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தூய்மை பணியாளர்கள் நோய் பாதிப்புக்கு தனி சிகிச்சை திட்டம்!
தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கையாளும் போது நுரையீரல் மற்றும் தோய் சம்பந்தமான் நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அவற்றிற்கு சிகிச்சையளிக்க தனித்திட்டம் தொடங்கப்படும் என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் மிக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை திட்டம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களின் உரிமத்தை ரத்து செய்ய அதிமுக ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் ரெஸ்டோ பார்களின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகளும் மகளிர் அணியினரும் பங்கேற்றனர்.
-
லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புகைப்படம்.. எதிர்க்கட்சிகள் கண்டனம்!
சென்னையில் 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இப்படியான நிலையில் அவர்கள் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் கவனம் ஈர்த்த நிலையில் முதலமைச்சர் கூலி படக்குழுவை பாராட்டியதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன
-
முதலமைச்சருக்கு படம் பார்க்கவே நேரம் போதவில்லை.. அன்புமணி விமர்சனம்
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திரைப்படங்களை பார்ப்பதற்கே பொழுது போதவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதையும் அவர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
வடபழனி பகுதியில் அமையும் ஆகாய மேம்பாலம்.. மெட்ரோ அனுமதி!
சென்னை வடபழனி பகுதியில் ஏற்கனவே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தையும், புதிதாக அமையவுள்ள ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஆகாய மேம்பாலம் அமைக்க மெட்ரோ நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.8.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
-
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்து வழக்கு.. நீதிமன்றம் உத்தரவு!
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ரூ.1லட்சம் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்தது.
-
நடிகர் ரஜினிகாந்தின் கூலி படம் ரிலீஸ்.. உற்சாக கொண்டாட்டம்
தமிழ்நாடு முழுவதும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி படம் ரிலீசாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அன்னதானம், ரத்ததானம் என நற்பணிகளிலும் ஈடுபட்டனர். கூலி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
-
தொடர் விடுமுறை எதிரொலி.. ஆம்னி பஸ் டிக்கெட் கிடுகிடு உயர்வு
தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல வழக்கமாக ரூ.650க்கு விற்கப்பட்ட டிக்கெட் தற்போது ரூ.1500 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படிக்க
-
சாகும் வரை அதிமுகவில் தான் இருப்பேன் – முன்னாள் அமைச்சர் தங்கமணி
திராவிட முன்னேற்ற கழகத்தில் தான் இணையவுள்ளதாக நாளிதழ் ஒன்றில் வெளியான தகவலுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி மறுப்பு தெரிவித்துள்ளார். சாகும் வரை அதிமுகவில் தான் இருப்பேன் எனவும், அந்த செய்தியை கேட்டு வருத்தமடைந்ததாகவும் கூறியுள்ளார்.
-
Independence Day: சுதந்திர தின விழா.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
இந்தியாவின் 79வது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை (ஆகஸ்ட் 15) ஆம் தேதி நாடெங்கும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் கடற்கரை சாலையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதனால் காமராஜர் சாலை முதல் இந்திய ரிசர்வ் வங்கி வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
ரஜினி மீது ரசிகர்கள் காட்டும் அன்புக்கு நன்றி.. லதா நெகிழ்ச்சி
கூலி படத்திற்காக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காட்டும் அன்புக்கு நன்றி என நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா தெரிவித்துள்ளார். கூலி நிச்சயம் பிளாக்பஸ்ட்ர் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
3 மாதங்களாக சம்பளம் இல்லை.. கடலூரில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
3 மாதங்களாக ஒப்பந்த நிறுவனம் ஊதியம் வழங்கவில்லை என கூறி கடலூர் மாவட்ட நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 45 வார்டுகளில் தனியார் நிறுவனம் மூலம் கடலூர் நகராட்சி தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது.
-
தூய்மை பணியாளர்கள் கைது..தவெக தலைவர் விஜய் கண்டனம்!
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். இதற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஜய் வெளியிட்ட பதிவு
தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம்!
குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல்,…
— TVK Vijay (@TVKVijayHQ) August 14, 2025
-
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழா தொடக்கம்!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் ஆவணி திருவிழா இன்று (ஆகஸ்ட் 13) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 10ம் நாளான ஆகஸ்ட் 23ம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. மேலும் படிக்க
-
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எங்கே- அப்டேட் இதோ
வட மேற்கு வங்க கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா பகுதிகளில் கடக்க கூடும் – வானிலை ஆய்வு மையம்
-
Chennai Rains : சென்னை மழை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை, இன்று ஆகஸ்ட் 14, 2025 வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது
-
Tamil Nadu Weather : மிதமான மழை பெய்யக்கூடும்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் , தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
மேம்பாலம் முன் விழுந்து வணங்கிய பிரேமலதா
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பெயரில் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று, ரிஷிவந்த்யம் தொகுதி பிரசாரத்தின்போது மறைந்த முன்னாள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எம்.எல்.ஏவாக இருந்த போது கட்டப்பட்ட மேம்பாலம் முன் விழுந்து வணங்கினார்.
-
முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டும் – அண்ணாமலை
மேலும் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என, தனது கட்சியினருக்கு, முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்
கண்டனம்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் திரு. ராஜன் என்ற நபரின் மனைவி, திருமதி. ஜீன் ஜோசப் என்பவர், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.
காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி… pic.twitter.com/R6DYqTqGQA
— K.Annamalai (@annamalai_k) August 13, 2025
-
தரங்கெட்ட நாடகம் – நெல்லை சம்பவத்துக்கு அண்ணாமலை கண்டனம்
நெல்லையில் ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவி தொடர்பான விவகாரத்தில் பாஜகவின் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகம் என அவர் விமர்சித்துள்ளார்.
-
தடை செய்யப்பட்ட நாய்கள் – பொதுமக்கள் குற்றச்சாட்டு
நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த தொழிலாளி, சிகிச்சைக்காக அருகில் இருக்கக்கூடிய கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில வெளிநாடு ஆக்ரோஷமான நாய்களை வளர்க்க அரசு தடை விதித்துள்ளதை மீறி பலரும் ராட்வீலர் போன்ற நாய்களை வளர்த்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
-
Chennai Crime : தொழிலாளியை கடித்த் ராட்வீலர் நாய்
சென்னை பூந்தமல்லி அருகே இருக்கும் கட்டுமான இடத்தில் இருந்த தொழிலாளியை பாதுகாப்பிற்காக கட்டி வைக்கப்பட்ட ராட்வீலர் நாய் கடித்து குதறியுள்ளது. இந்த சம்பவத்தில் தொழிலாளிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது
-
குண்டுகட்டாக கைது செய்த காவல்துறை
நேற்று நள்ளிரவில் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையுமே குண்டுகட்டாக காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இந்நிலையில், ஆகஸ்ட் 14 2027 தேதியான இன்று காலை முதல் மீண்டும் போராட்டம் தொடங்கும் என தூய்மை பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Chennai Sanitation Workers Protest : போராடியவர்கள் கைது
சென்னையில் 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை கைது செய்தது போலீஸ். முன்னதாக, அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதாக கூறி அவர்களை அப்புறப்படுத்த காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
-
Rajinikanth Movie : கலவையான விமர்சனத்தில் கூலி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாகவும், படம் நன்றாக இருப்பதாகவும் ஒரு தரப்பினர் பதிவிட்டுள்ளனர். அதேவேளையில் எதிர்பார்த்த விஷயம் எதுவும் இல்லை என்றும், இது வழக்காமன லோகேஷ் படமே இல்லை என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
-
Coolie Movie Review : கூலி படம் ரிலீஸ்.. முதல் ரிவியூ!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் இன்று வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பான் இந்தியா படமாக இந்தப்படம் வெளியாகியுள்ளது. தொடக்க ரிவியூவாக இப்படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.
-
அதிமுக சார்பில் கண்டனம் – ஈபிஎஸ்
ஈபிஎஸ் வெளியிட்ட கண்டன அறிக்கையில், ‘அப்பாவி மக்களை தனியார் பள்ளிகளை நோக்கி ஓடச்செய்து விட்டு அவர்கள் மீதே பழிபோட்டு அரசுப் பள்ளிகளை மூடும் அராஜகப் போக்கை கடைபிடித்து வருகிறது. இச்செயலை, அதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
என்ன விளக்கம்? – கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி
இது குறித்த அறிக்கையில், ‘விடியா திமுக-வின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், இன்று தமிழகத்தில் ஒரு மாணவர்கூட சேராததால் சுமார் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்?’ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
அறிக்கை
கடந்த நான்கு கல்வி ஆண்டுகளில், கல்வித் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திவிட்டோம்; இனி நிகழ்த்துவதற்கு எந்தஒரு சாதனையும் இல்லை என்று தினமும் மார்தட்டிப் பேட்டி அளிக்கும் விடியா திமுக-வின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், இன்று தமிழகத்தில் ஒரு மாணவர்கூட சேராததால் சுமார் 207 அரசுப்… pic.twitter.com/ZIwjuCcAUL
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) August 13, 2025
-
Edappadi K. Palaniswami : பள்ளிகளை திறக்க வேண்டும் – ஈபிஎஸ் கோரிக்கை
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 207 அரசு பள்ளிகள் மூடப்பட்டதை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து பள்ளிகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.