Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஈரான் இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம்.. தமிழர்களை அழைத்து வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை..

Iran Israel Conflict: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அங்கிருக்கும் தமிழர்களை பத்திரமாக அழைத்து வர தமிழ்நாடு அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக டெல்லியில் கட்டுப்பாட்டு அறை, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம்.. தமிழர்களை அழைத்து வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 22 Jun 2025 08:03 AM

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஈரானில் இருக்கக்கூடிய அணு ஆயுத நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது இதற்கு பதில் தாக்குதல் அளிக்கும் வகையில் ஈரானும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அங்கு இருக்கக்கூடிய தமிழர்களை பாதுகாப்பாக நாடு திரும்பும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக டெல்லியில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே இருக்கக்கூடிய மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஈரானின் மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரான் இஸ்ரேல் போரின் தீவிரம் மேலும் வலுவடைந்துள்ளது.

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்படுமா?

தற்போது ஈரான் மீது அமெரிக்க நாடு தாக்குதல் நடத்தி இருக்கும் நிலையில், அமெரிக்கா மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழல் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கனடாவில் நடைபெற்ற ஜி 7 உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் அனைவரும் இணைந்து பதற்றத்தை குறைக்கும் வகையில் இரு நாடுகளுக்கும் வலியுறுத்தி ஒரு வரைவை தயார் செய்தனர்.

ஆனால் அதில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்து போடவில்லை என்றும் உச்சி மாநாட்டில் இருந்து அவசரமாக வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அமெரிக்கா ஈரானில் இருக்கக்கூடிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அரசாங்கத்தின் ஆபரேஷன் சிந்து:

ஈரானில் அதிகரித்து வரும் பதற்றத்தை முன்னிட்டு அங்கு இருக்கக்கூடிய இந்தியர்களை பத்திரமாக மீண்டும் அழைத்து வரும் வகையில் ஆபரேஷன் சிந்துவை இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அதில் முதல் கட்டமாக வெள்ளிக்கிழமை அதாவது ஜூன் 20 2025 அன்று 290 இந்தியர்கள் ஈரானில் இருந்து நாட்டிற்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.

ஆபரேஷன் சிந்துவில் நேபால் மற்றும் இலங்கை குடிமக்கள்:


நேபால் மற்றும் இலங்கை நாட்டின் கோரிக்கையின் அடிப்படையில் இந்தியர்கள் மட்டுமல்லாமல் இலங்கை மற்றும் நேபாளை சேர்ந்த குடிமக்களும் ஆப்ரேஷன் சிந்து மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரபடுவார்கள் என இந்திய அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூன் 22 2025 தேதியான இன்று மேலும் ஒரு விமானம் இந்தியர்கள் மற்றும் நேபால் இலங்கை சேர்ந்தவர்களை அழைத்து வருகிறது.

தமிழ்நாடு அரசு நடவடிக்கை:


இது ஒரு பக்கம் இருக்க அங்கு வசிக்கக்கூடிய தமிழர்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நோக்கத்தோடு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறையை அங்குள்ள தமிழர்களின் விவரங்களை பெற்று உடனடியாக அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும் படி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தாயகம் திரும்ப தொடங்கியுள்ள இந்தியர்களில் தமிழர்கள் யாரேனும் இருந்தால் தமிழ்நாட்டிற்கு அவர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் பணி முடக்கிவிட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 011 24193300 என்ற தொலைபேசி எண்ணிலும், 9289516712 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் எனவும் tnhouse@tn.gov.in, procofficetnh@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.