AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் லாக்அப் மரண வழக்கு… 9 போலீஸ் குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விவரம் அறிவிப்பு!

Sathankulam Jayaraj Bennix Murder Case: சாத்தான்குளம் தந்தை- மகன் லாக் அப் மரணத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 போலீசாருக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தண்டனை விவரம் வழங்க உள்ளது. இந்த வழக்கில் தண்டனைவ விவரம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயராஜ்-பென்னிக்ஸ் லாக்அப் மரண வழக்கு… 9 போலீஸ் குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விவரம் அறிவிப்பு!
சாத்தான்குளம் லாக்அப் மரண வழக்கில் இன்று தீர்ப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 30 Mar 2026 08:09 AM IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020- ஆம் ஆண்டு போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்திருந்தனர். இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், கொலை சம்பவம் நடந்த போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசார் ரேவதி, பியூலா, உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சாட்சியம் அளித்திருந்தனர். சுமார் 6 ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

9 போலீசாரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிப்பு

இதில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இவர்களது தண்டனை விவரம் இன்று திங்கள்கிழமை ( மார்ச் 30) வெளியிடப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 9 போலீசாருக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது. முன்னதாக இந்த வழக்கில் கைதான போலீசார் தங்களுக்கு ஜாமீன் கோரி மாவட்ட நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் படிக்க: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை.. வானிலை ஆய்வு மையம்!

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

ஆனால், அந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை நிறைவடைந்ததால் மார்ச் 23ஆம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்து நீதிபதி முத்துக்குமார் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. 2020- ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் இரவில் செல்போன் கடையை மூடுமாறு போலீசார் அதன் உரிமையாளரான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸிடம் தெரிவித்திருந்தனர். ஆனால், சீக்கிரமாக கடைகளை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆட்சேபம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் கொடூரமாக கொலை

இதில், இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தந்தை, மகன் இருவரையும் போலீசார் கொடூரமான முறையில் தாக்கி சித்தரவதை செய்து கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விவரம் வழங்கப்பட உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: குடிசை வீட்டில் பற்றிய தீ.. அலறிய இரு உயிர்கள்.. சமையல் செய்த போது நிகழ்ந்த துயர சம்பவம்!

Follow Us