ரூ.25,000 கோடி மோசடி.. கோவில் நிலங்கள் அவசர அவசரமாக பட்டா மாற்றம்.. தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
நில உரிமைகளைத் தீர்மானிப்பதில் வருவாய்த்துறையின் பட்டா, சிட்டா போன்றவை மட்டுமே இறுதி ஆதாரமாகிவிடாது என்றும், சொத்துரிமை தொடர்பான வழக்குகளை சிவில் நீதிமன்றங்களே தீர்மானிக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளன என்று அவர் கூறினார்.
கோவை, ஜூலை 11: கரூர் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுமார் ரூ.25,000 கோடி மதிப்புள்ள 3,085 ஏக்கர் கோவில் நிலங்கள் அவசர அவசரமாக பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக அரசு அரங்கேற்றியுள்ள ஒரு மிகப்பெரிய மோசடி வேலை என்றும் அவர் சாடியுள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக இந்த மிகப்பெரிய முறைகேட்டை அரங்கேற்றியுள்ளதாக நயினார் நாகேந்திரன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்ட விரிவான தகவல்களை இக்கட்டுரையில் காணலாம்.
இதையும் படிக்க: சட்டசபையில் ஓட்டம் பிடித்தது யார்?.. “எங்க அப்பா பீரோக்குள்ள இல்ல!”.. கரூரில் திமுகவை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்!!
4 முக்கிய கோவில்களின் சொத்துக்கள் தாரைவார்ப்பு:
கரூர் மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த 4 முக்கிய திருக்கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களே இந்த நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அதன்படி, புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் , கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில், குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் திருக்கோவில் ஆகிய நான்கு கோவில்களுக்கும் பாத்தியப்பட்ட 3,085 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்களை, அவை கோவில் பெயரில் இருந்த நிலையை மாற்றி, தனி நபர்களுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் சாதகமாகப் பத்திரப்பதிவு செய்வதற்கான தடை உத்தரவை அறநிலையத்துறை நீக்கியுள்ளது. இந்த நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ₹25,000 கோடி ஆகும்.
ஒரே நாளில் நடந்த ‘மின்னல் வேக’ பரிந்துரை:
இந்த விவகாரத்தில் தமிழக அரசு காட்டியுள்ள அவசரம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். கடந்த 9-ஆம் தேதி காலையிலேயே கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இதற்கான பரிந்துரைகள் அனுப்பப்பட்டு, அறநிலையத்துறை இணை ஆணையராலும் உடனடியாக ஒப்புதல் வழங்கப்பட்டு, மின்னல் வேகத்தில் இந்த நிலங்களுக்கான தடையாணை நீக்கப்பட்டு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் ஒரு சிறிய பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என்றால் கூட வாரக் கணக்கில், மாதக் கணக்கில் அரசு அலுவலகங்களை நோக்கி அலைய வேண்டியுள்ளது. ஆனால், நில மாஃபியாக்களுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் சாதகமாக இத்தனை ஆயிரம் கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களின் தடையாணையை ஒரே நாளில் நீக்க வேண்டிய அவசியம் என்ன என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது:
நில உரிமைகளைத் தீர்மானிப்பதில் வருவாய்த்துறையின் பட்டா, சிட்டா போன்றவை மட்டுமே இறுதி ஆதாரமாகிவிடாது என்றும், சொத்துரிமை தொடர்பான வழக்குகளை சிவில் நீதிமன்றங்களே தீர்மானிக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளன. அப்படி இருக்கையில், நீதிமன்ற விசாரணையில் உள்ள கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்குச் சாதகமாகத் தடையாணை நீக்கம் செய்தது சட்டத்திற்குப் புறம்பானது என ஆன்மீகப் பெரியோர்களும் கோவில் ஆர்வலர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
முதலமைச்சர் விஜய்க்கு கண்டனம்:
முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரின் முழு பின்னணியோடு தான் இந்த மோசடி அரங்கேறியுள்ளதா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்து கோவில்களின் சொத்துக்களையும் அடையாளங்களையும் அழிக்க வேண்டும் என்ற வன்மத்தோடு இந்த அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் சாடினார். அதோடு, தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மேலும், இது தொடர்பான முழுமையான ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, முறைகேடாக மாற்றப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கோவில் நிலங்களை மீட்டெடுப்பதற்காக பாஜாக சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிக்க: “என் வாழ்நாளில் மறக்க முடியாத ஆறாத வடு கரூர் சம்பவம்!”.. முதல்வர் விஜய் ஆவேச பேச்சு!!
மேலும், முதலமைச்சர் கரூர் வருகையின் போது அரசுப் பள்ளிகளில் அவரது உரைகளை ஒளிபரப்பியது, பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது போன்ற நடவடிக்கைகள் மாணவர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் செயல் என்றும், இது சினிமாவில் மட்டுமே சாத்தியம், நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராது என்றும் அவர் விமர்சித்தார்.